சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்த கருத்துக்கு மத்திய அமைச்சர்கள் மற்றும் இந்து அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் டெல்லி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 2ம் தேதி தமுகஎச சார்பில் “சனாதன ஒழிப்பு மாநாடு’ நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய தமிழ்நாடு விளையாட்டுத்துறை உதயநிதி ஸ்டாலின் “ இந்த மாநாட்டிற்கு சனாதன ஒழிப்பு மாநாடு என மிகச் சரியாக வைத்துள்ளீர்கள். சனாதன எதிர்ப்பு மாநாடு வைக்கவில்லை. சனாதனத்தை எதிர்ப்பதை விட ஒழிப்பதுதான் சிறந்தது. எப்படி டெங்கு, மலேரியா மற்றும் கோவிட் போன்றவற்றையும் ஒழித்துள்ளோமோ அதே போல சாதி மற்றும் ஏற்றத் தாழ்வுககளை ஊக்குவிக்கும் சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும்” என பேசியிருந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த பேச்சுக்கு கண்டங்கள் எழுந்த நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சனாதன தர்மத்தை கொசுக்கள், டெங்கு, மலேரியா மற்றும் கொரோனாவுடன் ஒப்பிட்டு பேசிய அமைச்சர் உதயநிதிக்கு கடும் கண்டனம் என குறிப்பிட்டுள்ளார். இது கிறிஸ்தவ மிஷனரிகளிடம் இருந்து பெறப்பட்ட யோசனை என அண்ணாமலை சாடியுள்ளார்.
அதேபோல ஒடிசா மாநிலம், புவனேஸ்வரில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழ்நாட்டில் சிலரின் உண்மை நிலை தற்போது வெளிவந்துள்ளதாக தெரிவித்தார். காசி தமிழ் சங்கம் மூலம் தமிழ்நாட்டில் சனாதனம் நிரந்தரமானது என்பது தெளிவாகியுள்ளது எனக்கூறியுள்ள அவர், உதயநிதியின் பேச்சால் எதுவும் நடக்கப் போவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, சனாதன தர்மத்திற்கு எதிராக கருத்து தெரிவித்ததாக அமைச்சர் உதயநிதி மீது வழக்குப்பதிவு செய்ய கோரி டெல்லி காவல் நிலையத்தில் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் வினீத் ஜிண்டால் புகார் அளித்துள்ளார். அதில், சனாதன தர்மத்திற்கு எதிராக உதயநிதி இழிவான கருத்துகளை தெரிவித்துள்ளதாகவும், இந்த கருத்துகள் இந்துக்கள் இடையே கொத்தளிப்பை தூண்டும் வகையில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.