டி-20 உலகக் கோப்பைத் தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது.
டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 12 போட்டியில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் துபாயில் நேற்று மோதின. இந்திய அணியில் புவனேஷ்வர்குமார் நீக்கப்பட்டார். காயம் காரணமாக சூர்யகுமார் யாதவும் சேர்க்கப்படவில்லை. அவர்களுக்கு பதிலாக இஷான் கிஷானும் ஷர்துல் தாகூரும் சேர்க்கப்பட்டனர்.
முதலில் களமிறங்கிய இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். வழக்கமாக அதிரடியில் ஆடும் கே.எல்.ராகுல், ரோகித் சர்மா, கேப்டன் கோலி உட்பட அனைவரும் ஒருவித பதட்டத்துடனேயே ஆடினர். இதனால் அவசரத்தில் சிக்சர் அடிக்கும் முயற்சியில் ஆட்டமிழந்து வெளியேறுவதுமாக இருந்தனர்.
அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 26 ரன்களும் ஹர்திக் 23 ரன்களும் எடுத்திருந்தனர். மற்றவர்கள் சொல்லிக் கொள்ளும்படியான ரன்களை அடிக்கவில்லை. இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர் முடிவில் இந்திய அணி, 7 விக்கெட்டுகளை இழந்து 110 ரன்கள் மட்டுமே எடுத்தது.
நியூசிலாந்து தரப்பில், டிரெண்ட் போல்ட் 3 விக்கெட்டுகளையும் சோதி 2 விக்கெட்டு களையும் டிம் சவுதி, மில்னே தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். பின்னர் 111 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான மார்ட்டின் கப்தில் 20 ரன்களிலும், டேரி மிட்செல் 49 ரன்களிலும் பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். கேன் வில்லியம்சன் (33) கடைசிவரை களத்தில் நின்று அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இதனால் நியூசிலாந்து அணி 14.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.









