திருவேங்கடம் என்கவுண்டரில் சந்தேகம்.. சரணடைந்தவர் கொல்லப்பட்டது ஏன்? – இபிஎஸ் கேள்வி!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட திருவேங்கடம் என்கவுண்டரில் சந்தேகம் இருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.  வேலூர் மாவட்டம் காட்பாடியில் தொழிலதிபர் சேகர் ரெட்டியின்…

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட திருவேங்கடம் என்கவுண்டரில் சந்தேகம் இருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

வேலூர் மாவட்டம் காட்பாடியில் தொழிலதிபர் சேகர் ரெட்டியின் தந்தையான உயிரிழந்த ஜெகன்நாதன் ரெட்டியின் திருவுருவப்படத்திற்கு அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பணபலம், அதிகார பலத்தினால் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுகவினர் வெற்றி பெற்றுள்ளனர். காவிரி பிரச்னையில் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தெளிவான உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன் அடிப்படையில் கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்று ஒவ்வொரு ஆண்டும் வழங்க வேண்டிய தண்ணீரை தமிழகத்திற்கு வழங்க வேண்டும். ஆனால் கூட்டணியில் இடம் பெற்றுள்ள திமுக தமிழ்நாடு விவசாயிகளின் நலனில் அக்கறை கொள்ளாத திமுக அரசு, கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் அரசை  எதிர்த்து குரல் கொடுக்கவில்லை.

ஆனால் அதிமுக இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளது. கபினி அணையில் தற்பொழுது தண்ணீர் நிரம்பியுள்ளது. அதனை தேக்கி வைக்க முடியாமல் கர்நாடக அரசு
அதனை திறந்து உள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில திருவேங்கடம் என்பவர் சரணடைந்துள்ளார். சரண் அடைந்தவர் என்கவுண்டரில் சுட்டுக் கொள்ளப்பட்டுள்ளார். ஏன் அவர் அவசர அவசரமாக காலையில் திடீரென அழைத்து செல்லப்பட்டு என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளார். இது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்து வரும் நிலையில், தற்போது ஒரு என்கவுண்டர் நடந்திருப்பது மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது” என தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.