வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான சூரி, தற்போது சிவகார்த்திகேயன் தயாரிப்பிலும் ஹீரோவாக நடிக்க உள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்துகொண்டிருக்கும் சிவகார்த்திகேயன், நடிகராக மட்டுமல்லாமல் படங்களை தயாரித்தும் வருகிறார். அந்த வகையில் கடந்த 2018-ம் ஆண்டு அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான ‘கனா’ படத்தை தயாரித்திருந்தார் சிவகார்த்திகேயன். இதனையடுத்து பல படங்களை தொடர்ந்து தயாரித்தவர் தற்போது நடிகர் சூரியை கதாநாயகனாக வைத்து ‘கொட்டுக்காளி’என்கிற படத்தை தயாரிக்க உள்ளார். இப்படத்தை இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்க உள்ளார். இவர் இதற்கு முன் உலகளவில் பல்வேறு விருதுகளை வென்று குவித்த ‘கூழாங்கல்’ என்கிற படத்தை இயக்கியவர் ஆவார். மேலும் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் அனன்யா பென் என்கிற மலையாள நடிகை நடிக்க, படத்திற்கு சக்தி ஒளிப்பதிவு செய்து, படத்தொகுப்பாளராக கணேஷ் சிவா பணியாற்ற உள்ளார்.
இது குறித்த அறிவிப்பை தனது SK புரொடக்ஷன்ஸ் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்த சிவகார்த்திகேயன், படம் குறித்து கூறும்போது, “ஒரு படைப்பாளி தன்னுடைய சொந்த மண்ணின் கூறுகளை அதன் தன்மை மாறாது படமாக்கித் தந்து அது சர்வதேச அளவுகளில்
அங்கீகாரம் பெறுவது திரைப்படத்துறையின் விலைமதிப்பற்ற தருணம் என்றுதான் சொல்ல வேண்டும்.
அந்த வகையில், ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் மதிப்புமிக்க ‘டைகர் அவார்ட்’ வென்று, ‘கூழாங்கல்’ திரைப்படத்தின் மூலம் நம் தமிழ்த் திரையுலகைப் பெருமைப்படுத்திய இயக்குநர் பி.எஸ் வினோத்ராஜ் ஒரு ஜெம் என்று சொல்வேன். எனது நெருங்கிய நண்பரான சூரியுடன் இந்தப் படத்தில் பணிபுரிவது எனக்கு உற்சாகமான விஷயம். மேலும், அன்னா பென் போன்ற திறமை மிக்க நடிகை எங்கள் படத்தில் இருப்பதும் மகிழ்ச்சி அளிக்கிறது” என்று கூறினார். ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான சூரி, தற்போது சிவகார்த்திகேயன் தயாரிப்பிலும் ஹீரோவாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
https://twitter.com/Siva_Kartikeyan/status/1634048937672982528?s=20
- பி.ஜேம்ஸ் லிசா








