உலகத்திலேயே முதல்முறையாக பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்கு வெற்றிகரமாக பொருத்தி அமெரிக்க மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்த என்.ஒய்.யு லங்கோன் மருத்துவமனையில் மூளைச் சாவடைந்த ஒரு நபரின் சிறுநீரகம் செயலிழக்கும் நிலையில் இருந்தது. அவருடைய குடும்பத்தினரின் அனுமதியைப் பெற்ற மருத்துவ விஞ்ஞானிகள் பன்றியினுடைய சிறுநீரகத்தை பொருத்தி சோதனை மேற்கொண்டனர்.
பன்றியின் சிறுநீரகம் அவரின் ரத்தக் குழாய்களில் இணைக்கப்பட்டு, உடலுக்கு வெளியே வைத்து மூன்று நாட்கள் வரை பராமரிக்கப்பட்டுள்ளது. சிறுநீரகம் மூளைச் சாவடைந்த நபரின் நோயெதிர்ப்பு மண்டலத்தால் உடனடியாக நிராகரிக்கப்படாமல் இயங்கியுள்ளது.
சிறுநீரக செயல்பாட்டின் சோதனை முடிவுகள் “மிகவும் சாதாரணமாகத் தோன்றியது” என்று ஆய்வுக்கு தலைமை தாங்கிய மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் ராபர்ட் கூறியுள்ளார்.
மேலும் முன்னர் இருந்த சிறுநீரகத்தின் செயல்பாடு மிக மோசமானதாகவும், கெரோட்டினின் அளவு அசாதாரணமாகவும் இருந்ததாக குறிப்பிடும் அவர், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு கெரோட்டின் அளவு வழக்கமான நிலைக்கு வந்துவிட்டதாகவும் தெரிவிக்கிறார்.
இது உறுப்பு மாற்று சிகிச்சையில் ஒரு மைல்கல்லாகவும், லட்சக்கணக்கானோர் உறுப்பு மாற்று சிகிச்சைக்காக காத்திருக்கும் நிலையில், உறுப்புகளின் பற்றாக்குறையை நீக்கும் வகையிலும் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.








