பழங்குடியின நலத்துறை குறித்த சுரேஷ் கோபியின் கருத்து – கண்டனங்கள் எழுந்த நிலையில் வாபஸ்!

பழங்குடியினர் நலத்துறைக்கு உயர் வகுப்பினர் அமைச்சராக வேண்டும் என்ற தனது கருத்துக்கு கண்டனங்கள் எழுந்த நிலையில் அதை திரும்ப பெறுவதாக சுரேஷ் கோபி எம்பி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் வருகிற பிப்ரவரி 5ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றுவுள்ள நிலையில்,  பாஜக சார்பில் இன்று தேர்தல் பிரச்சாரக் கூட்டம்  நடைபெற்றது. அதில் நடிகரும் திருச்சூர் எம்பியுமான சுரேஷ் கோபி பங்கேற்றார்.

அப்போது அவர், “ பழங்குடியினர் நலத்துறையை எனக்கு வழங்க வேண்டும் என்று  பிரதமர் மோடியிடம் கேட்டுக் கொண்டிருக்கிறேன். பழங்குடியினர் நலத்துறைக்கு உயர் வகுப்பினர் அமைச்சரானால் உண்மையான வளர்ச்சி சாத்தியமாகும்.

பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் மட்டுமே பழங்குடியினர் நலத்துறைக்கு அமைச்சராக முடியும் என்பது நம் நாட்டின் சாபக்கேடு” என்று பேசினார். அவரின் இந்த பேச்சுக்கு கேரள மாநில அமைச்சர் ராஜேஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் பினோய் விஸ்வம் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

தொடர்ந்து கண்டங்கள் குவிந்த நிலையில் தனது கருத்தை  திரும்ப பெறுவதாக சுரேஷ் கோபி  தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது, “யாரையும் உயர்த்தியோ, தாழ்த்தியோ பேசவில்லை என்றும் தன்னுடைய கருத்து சரியாக புரிந்துகொள்ளப்படாததால், கருத்தை திரும்ப பெறுகிறேன்”

இவ்வாறு சுரேஷ் கோபி எம்பி தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.