உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களில் இட ஒதுக்கீட்டை கட்டாயமாக்க வேண்டும் – சித்திரை முழுநிலவு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றம்!

சித்திரை முழு நிலவு மாநாட்டில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றம்…

மாமல்லபுரத்தில் வன்னியர் சங்கம் மற்றும் பாமக சார்பில் சித்திரை முழு நிலவு மாநாடு நடைபெற்றது. பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரது தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவின் தொடக்கத்தில் வன்னியர் சங்கக் கொடியை பாமக நிறுவனர் ராமதாஸ் ஏற்றி வைத்தார். அப்போது, மாநாட்டில் பாகிஸ்தான் தாக்குதலில் உயிரிழந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து மொத்தம் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

அவை பின்வருமாறு;

  • தமிழ்நாட்டில் 69% இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க மாநில அரசின் சார்பில் தனியாக சாதிவாரி சர்வே நடத்தப்பட வேண்டும்.
  • உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் வன்னியர்களுக்கு உடனடியாக உள்இடஒதுக்கீடு வழங்கவேண்டும்.
  • அனைத்து சமூகங்களுக்கும் அவர்களின் மக்கள் தொகைக்கு இணையாக இட ஒதுக்கீடு வழக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.
  • பட்டியலின மக்களுக்கான இட ஒதுக்கீட்டின் அளவை, அவர்களின் மக்கள்தொகைக்கு இணையாக மேலும் 2% உயர்த்த வேண்டும்.
  • சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், இடஒதுக்கீட்டுக்கான உச்சவரம்பை நீக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
  • மத்திய அரசின் ஓபிசி இடஒதுக்கீட்டில் கிரிமிலேயர் முறையை நீக்க வேண்டும்.
  • தனியார்துறையில் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும்.
  • உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் இடஒதுக்கீட்டை கட்டாயமாக்க வேண்டும்.
  • தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் பிற்படுத்தப்பட்ட மிகவும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50% இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.
  • தமிழ்நாட்டில் அனைத்துச் சமூக மக்களின் வளர்ச்சிக்காக நிதி அதிகாரத்துடன் கூடிய தனித்தனி கார்ப்பரேஷன் அமைக்கப்பட வேண்டும்.
  • .தமிழ்நாட்டில் கல்வி, தனிநபர் வருமானம், மனிதவள குறியீட்டில் பின்தங்கிய நிலையில் உள்ள வடமாவட்டங்களின் முன்னேற்றத்திற்கு சிறப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
  • முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்தவும், போதைப் பொருட்களை ஒழிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
  • பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தானுக்கு எதிராக எதிர்காலத்திலும் இந்தியாவின் இராணுவ நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு.
  • ஜம்மு -காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.