பள்ளிகளுக்கு நாளை முதல் கோடை விடுமுறை!

1 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு நாளை (ஏப்.24) முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு, பிளஸ் 1,  பிளஸ் 2,  மாணவர்களுக்கு மாா்ச் 1 முதல் ஏப்.8…

1 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு நாளை (ஏப்.24) முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு, பிளஸ் 1,  பிளஸ் 2,  மாணவர்களுக்கு மாா்ச் 1 முதல் ஏப்.8 வரை பொதுத் தோ்வு நடைபெற்று முடிந்தது.  இதனைத் தொடா்ந்து 1-9 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு ஆண்டு இறுதித் தோ்வு ஏப்.2 முதல் தொடங்கியது.  இந்தத் தோ்வுகள் ஏப்.12 இல் முடிக்கப்பட்டு ஏப்.13 முதல் கோடை விடுமுறை அளிக்க பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டிருந்தது.

இதனிடையே, 4-9 வகுப்பு மாணவா்களுக்கு ஏப்.10, 12 ஆகிய நாள்களில் நடைபெறவிருந்த தோ்வுகள் ரம்ஜான் பண்டிகை காரணமாக,  ஏப்.22, 23 ஆகிய தேதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டன.  அந்த வகையில் இறுதித் தோ்வுகள் இன்றுடன் நிறைவடையவுள்ளன.  தொடா்ந்து மாணவா்களுக்கு நாளை (ஏப்.24) முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1, அல்லது 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.  ஆனால் கடந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டது.  அந்த வகையில் 6 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 12-ஆம் தேதியும்,  1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 14-ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்பட்டன.

இந்த நிலையில்,  வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.  மேலும், ஜூன் 4-ஆம் தேதி மக்களவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.  அதன்பிறகே பள்ளிகள் திறப்பு இருக்கும் என பள்ளிக் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.