மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவு அருகே நள்ளிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தென்மாவட்டங்களில் மிக முக்கியமான மருத்துவமனையாக விளங்க கூடியது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை. மதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் இங்கு உயர்சிகிச்சைக்காக பலர் இந்த மருத்துவமனைக்கு வருவதுண்டு. இந்த மருத்துவமனை வளாகத்தில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவு அருகே சுரங்கப்பாதை பகுதியில் சாலையோர வியாபாரிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பொருட்களில் தீ விபத்து ஏற்பட்டது.
கண் இமைக்கும் நேரத்தில் தீயானது மளமளவென பரவி மருத்துவமனை வளாகத்தில் உள்ள மரத்தில் பற்றி கொளுந்து விட்டு எரிய தொடங்கியது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மருத்துவமனை ஊழியர்கள், செவிலியர்கள் உடனடியாக காவல் துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
மேலும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தல்லாகுளம் தீயணைப்புத் துறையினர் சுமார் 30 நிமிடம் போராடி தீயை முழுமையாக அனைத்தனர். இந்த விபத்து குறித்து அரசு மருத்துவமனை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவத்தின் போது யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என்றாலும் தீவிர சிகிச்சை பிரிவு அருகே திடீரென தீப்பற்றி இருந்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.








