சென்னை கண்ணகி நகரில் 11 வயது சிறுவன் திடீரென உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை கண்ணகி நகர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். ஆட்டோ ஓட்டுநரான இவர் மனைவி மற்றும் 3 ஆண் பிள்ளைகளுடன் கண்ணகி நகரில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் வசித்து வருகிறார். இவரது இரண்டாவது மகன் வசந்தகுமார் (11) துரைப்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்று மாலை வீட்டின் அருகே உள்ள பார்கில் விளையாடிவிட்டு வீடு திரும்பியபோது பானிபுரி தின்றுவிட்டு, வழியில் உள்ள கடையில் ரோஸ்மில்க் வாங்கி குடித்துள்ளார்.
பின்னர், வீட்டுக்கு சென்ற சிறுவன் திடீரென மயக்கமடைந்து சாலையில் தள்ளாடி விழுந்துள்ளார். உடனே அவரது தாய் திவ்யா மற்றும் அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் மூலமாக ஈஞ்சம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த கண்ணகி நகர் போலீசார் சிறுவன் உயிரிழப்பு தொடர்பாக உறவினர்களிடையே விசாரணை மேற்கொண்டதில் வலிப்பு ஏற்பட்டதாக கூறியுள்ளனர். பின்னர் சிறுவன் ரோஸ்மில்க் வாங்கி குடித்த கடைக்காரர் பெத்ராஜ் என்பவரை விசாரித்தபோது முருகானந்தம் என்பவர் வீட்டில் வைத்து தயாரிக்கும் ரோஸ் மில்க் கடைகளில் சப்ளை செய்வதாகவும் அதனைதான் சிறுவன் குடித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சிறுவனின் தாயார் கொடுத்த தகவலின் அடிப்படையில் கண்ணகி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் பிரேத பரிசோதனைக்கு பிறகே சிறுவன் உயிரிழப்பிற்கு காரணம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர். ரோஸ்மில்க்கின் மாதிரி சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், சிறுவனுக்கு சிறு வயது முதலே வலிப்பு வருவது வழக்கம் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்ததாக கூறப்படுகிறது.







