விருத்தாச்சலத்தில் சரியாகப் படிக்காததால் பெற்றோர் பேசாமல் இருந்ததையடுத்து, பிளஸ்2 மாணவி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் ஆயியார் மட தெருவைச் சேர்ந்தவர் கோபி மகள் சிவகாமி (17). இவர் விருத்தாசலம் பெரியார் நகரில் உள்ள சக்தி மெட்ரிக் பள்ளியில் பிளஸ்2 வகுப்பு படித்து வந்தார். நேற்று இரவு திடீரென சிவகாமி தூக்கிட்டு தனது உயிரை மாய்த்துக் கொண்டார். இந்நிலையில், வீட்டில் அவரது இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்தன.
இதுகுறித்து அறிந்த விருத்தாசலம் போலீஸார் விரைந்து சென்று சிவகாமியின்
பிரேதத்தைக் கைப்பற்றி விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப்
பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். அவரது உயிரிழப்பு
குறித்து போலீஸார் விசாரணை நடத்தியபோது சிவகாமி சரியாக படிக்கவில்லை எனவும், தனது பெற்றோர்கள் பேசாததால் மன உளைச்சலில் இருந்த அவர் தூக்குபோட்டு உயிரை மாய்த்துக் கொண்டதாக கடிதம் எழுதி வைத்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவித்தனர். மேலும், அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதால் போலீஸார் அவரது இறப்புக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-ம.பவித்ரா








