கோவை மாவட்டம், ஈஷா யோக மையத்தில் யோகா பயிற்சி மேற்கொண்டு வந்த ஆந்திர மாநில இளைஞர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டிணத்தைச் சேர்ந்தவர் கொள்ளு ரமணா (32). இவர் மன அழுத்தம் காரணமாக கோவையில் உள்ள ஈஷா யோக மையத்தில் ஆறு மாத யோகா பயிற்சியில் சேர்ந்து பயிற்சி பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று இரவு ஈஷாவில் உள்ள அவரது அறையில் கடிதம் எழுதி வைத்துவிட்டு, தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். அந்தக் கடிதத்தில் மன அழுத்தம் காரணமாக உயிரை மாய்த்துக் கொள்வதாக எழுதப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, ஆலாந்துறை போலீஸாருக்கு கிடைத்த தகவலின்பேரில், ஈஷா யோக மையத்துக்குச் சென்ற போலீஸார் ரமணாவின் உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
கொள்ளு ரமணா எழுதிய கடிதத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, ஈஷா யோக மைத்தில் டி.எஸ்.பி. திருமால் தலைமையிலான போலீஸார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈஷா யோக மையத்தில் யோகா பயிற்சி பெற்று வந்த நபர் மன அழுத்தம் காரணமாக உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-ம.பவித்ரா








