நியூஸ் 7 தமிழின் தெருக்குரல் நிகழ்ச்சியில் வெளியிடப்பட்ட செய்தி எதிரொலியாக, மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்தனர்.
ஈரோடு மாவட்டம் சித்தோடு வாய்க்கால்மேடு பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவருக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வந்தார். இந்நிலையில் அப்பகுதியில் செயல்படும் சாய,சலவை தொழிற்சாலை கழிவு நீரினால் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயத்தை கைவிட்டு தனது சொந்த நிலத்தில் குடோன் அமைத்து அதனை வாடகைக்கு விட்டு அதன் மூலமாக கிடைக்கும் வருமானத்தை கொண்டு பிழைப்பு நடத்தலாம் என திட்டமிட்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் கட்டுமான பணிகளை மேற்கொண்ட அவர் கட்டிடத்தின் தண்ணீர் தேவைக்காக ஆழ்துளை கிணறு அமைத்து கட்டிடத்தின் சுவர்களுக்கு தண்ணீரை தெளித்து உள்ளார். வெள்ளை நிறத்தில் இருந்த ஹாலோ பிளாக் கட்டிட சுவர், தண்ணீர் தெளித்ததும் சுவர் முழுவதிலும் மஞ்சள் நிறமாக மாறியுள்ளது. மேலும் கட்டுமான தேவைக்காக பேரலில் வைக்கப்பட்ட தண்ணீரும் முற்றிலும் மஞ்சள் நிறமாக மாறியுள்ளதை கண்டு ராமசாமி அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து கட்டிடத்தின் உறுதி தன்மையின் மீது ஏற்பட்ட சந்தேகம் காரணமாக கட்டுமான பணியை பாதியில் நிறுத்தினார்.
அதேபோல் அவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் உள்ள கிணற்று நீரை தோட்டத்திற்கு பாய்ச்சும் போது சாய சலவை ஆலையின் கழிவு நீரின் காரணமாக நுரை பொங்கி செல்வதால் விவசாயத்திற்கும்,கால்நடைகளுக்கும்,குடிநீருக்கும் கூட நீரை பயன்படுத்த முடியவில்லை எனக் கூறியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திற்கும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி மணிவண்ணன் அவார்களுக்கும் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கைகளும் எடுக்க வில்லை என்று கூறினார்.
மேலும் இப்பகுதியில் ஏராளமான குடியிருப்பு மற்றும் அரசு பள்ளிகள் இருப்பதால் இங்கு செயல்பட்டு வரும் சாய,சலவை ஆலை கழிவுகளால் பெரிதும் பாதிக்கபட்டு வருவதாகவும், தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும், மாசு கட்டுப்பாட்டு வாரியமும் உரிய நடவடிக்கை எடுத்து பொதுமக்கள் உயிரை காப்பாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
சாய,சலவை, தோல் தொழிற்சாலைகள் பூஜ்ஜியம் முறையில் ஆலை கழிவுகளை முறையாக சுத்திகரிப்பு செய்ய வேண்டும் எனவும், அதனை முறையாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் கண்காணிக்க வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு இருந்தும் சாய,சலவை தொழிற்சாலைகள் கழிவு நீரை முறையாக சுத்திகரிப்பு செய்யாமல் நிலத்தடியில் வெளியேற்றியதால் புதியதாக கட்டி வரும் கட்டிடத்தின் நிறமே மாறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக நியூஸ் 7ன் தெரு குரல் செய்தி மூலமாக மாவட்ட நிர்வாகம் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றதையடுத்து சம்பவ இடத்திற்கு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அடங்கிய குழு அங்கு வந்தனர். பின்பு கட்டிடம் மற்றும் ராமசாமியின் இடத்தில் உள்ள ஆழ்துளை கிணற்று நீர், விவசாய தோட்டத்தில் உள்ள கிணற்று நீர் ஆகியவற்றை ஆய்வுக்காக எடுத்து சென்றனர். அதனைத் தொடர்ந்து அருகாமையில் உள்ள சாய,சலவை,கெமிக்கல் ஆலைகளைக்கு சென்று ஆய்வு செய்தனர். பின்பு தண்ணீரின் தன்மைகளையும் ஆலைகளையும் முழுமையாக ஆய்வு செய்த பின்னர் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.