மின் கட்டண உயர்வுக்கு மத்திய அரசை குறை சொல்வதை விட்டுவிட்டு, தமிழ்நாட்டு மக்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுங்கள் என டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அமமுக பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், அதிமுக உட்கட்சி சண்டை பற்றி எதற்கு பேசிக் கொண்டு இருக்க வேண்டும். எல்லாம் தானாக முட்டி மோதி ஒரு முடிவுக்கு வந்த பின் பேசலாம் என்றார்.
அதிமுகவில் 2 பேரும் நிர்வாகிகளை நீக்குவது மாற்றுவது பற்றி அந்த கட்சி தொண்டர்களிடம் தான் கேட்க வேண்டும். சம்பந்தமே இல்லாத என்னிடம் ஏன் கேட்கிறீர்கள் என நகைச்சுவையாக பேசிய அவர், ஒரு காலத்தில் தான் அதிமுகவில் இருந்தேன் என தெரிவித்தார்.
அப்பர்களுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பார்கள் என்று தான் கேள்வி பட்டு இருக்கிறோம். ஆனால் கடலில் பேனாவை நட்டு வைப்பதை இப்போது தான் பார்க்கிறோம். இது போன்ற வெற்று விளம்பரங்களால் தான் திமுகவை மக்கள் ஆட்சி பொறுப்பில் இருந்து இறக்குவார்கள். கடந்த எடப்பாடி அண்ணன் ஆட்சியில் மக்களுக்கு ஏற்பட்ட கோபத்தால் விடியல் ஆட்சி வந்தது. விடியல் ஆட்சிக்கு மக்கள் விரைவில் முடிவு கட்டுவார்கள்.
மின் கட்டணம் உயர்வை திரும்ப பெற வேண்டும். மத்திய அரசை குறை சொல்வதை விட்டு தமிழக அரசு ஏழை, எளிய, நடுத்தர மக்களை பாதிக்காத வகையில் திரும்ப பெற வேண்டும். கடன் வேண்டும் என்றால் மின் கட்டணத்தை உயர்த்துங்கள் என சொல்லி இருக்கிறது. கடன் வேண்டாம் என்று சொல்லி விட்டு தமிழ்நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வதற்கான வழிமுறைகளை காண வேண்டும்.
கடன் தேவை என்பதால் மின் கட்டணத்தை உயர்த்த சொல்லி இருக்கலாம். கடன் வேண்டும் என்பதற்காக திமுக அரசு மின்கட்டணத்தை உயர்த்தி உள்ளார்கள் என டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.
– இரா.நம்பிராஜன்








