போக்குவரத்துத் துறையில் காலி பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக விரைவில் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் பெறுவதற்கான அறிவிப்பு வெளியாகும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சென்னை, விழுப்புரம், சேலம் என எட்டு மண்டலங்களாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் 600 முதல் 700 ஓட்டுநர்களும், நடத்துநர்களும் ஜூன் 30ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெறுகின்றனர். இதனால் 30 ஆயிரம் காலிப்பணியிடங்கள் உருவாகின்றன. ஆட்கள் பற்றாக்குறை காரணமாக போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வேலைபளு அதிகரித்துள்ளது. புதிய பேருந்துகளை கொள்முதல் செய்ய போக்குவரத்து துறைசார்பில் ஒப்பந்த புள்ளி வெளியிடப்பட்டுள்ள நிலையில், புதிய பணியாளர்கள் எப்போது நியமிக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தொழிலாளர்கள் பற்றாக்குறை காரணமாக நாள்தோறும் 3 ஆயிரம் பேருந்துகள் வரை நிறுத்தி வைக்கப்படுவதாக சிஐடியு தொழிற்சங்க தலைவர் சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். கடந்த 8 ஆண்டுகளாக போக்குவரத்துத்துறையில் ஊழியர்கள் நியமனம் செய்யப்படவில்லை என அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் கமலக்கண்ணன் குற்றம்சாட்டி உள்ளார். அரசு போக்குவரத்து கழகத்தில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களால் வேலைபளு அதிகரித்துள்ளதாக மதுரையைச் சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் போக்குவரத்த்து துறையில் உள்ள 30 ஆயிரம் காலிப்பணியிடங்கள் தொடர்பாக நியூஸ் 7 தமிழின் அறச்சீற்றம் பகுதியில் இன்று விரிவாக விவாதிக்கப்பட்டது. அப்போது காலிப்பணியிடங்கள் எப்போது நிரப்பப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அப்போது அவர் கூறியதாவது ;
போக்குவரத்து துறையில் காலியிடப் பணியிடங்கள் ஏற்படுவது இயற்கையானது. விரைவில் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் பெறுவதற்கான அறிவிப்பு வெளியாகும். ஓய்வுபெறும் வயதை 58-ல் இருந்து 60-ஆக உயர்த்துவதால் ஓய்வு பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. முறைப்படி பயிற்சி பெற்ற ஓட்டுநர்கள், நடத்துநர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். விரைவில் இது தொடர்பாக பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அதேபோல், நியூஸ் 7 தமிழ் அறச்சீற்றம் எதிரொலியாக, நியூஸ் 7 தமிழுக்கு தொலைபேசி வாயிலாக பேட்டியளித்த சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் இளங்கோவன், போக்குவரத்துத் துறையில் காலியாக உள்ள 1,600 பணியிடங்கள் ஓரிரு வாரங்களில் நிரப்பப்படும். அதற்காக ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளன. முதற்கட்டமாக 685 பேருக்கு அரசுப் பணியில் சேர்வதறகான அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது என்று கூறினார்.
- பி.ஜேம்ஸ் லிசா