பல்வேறு சாகச விளையாட்டுகளை விளையாடும் வகையில் குண்டாறு அணை சுற்றுலாதலமாக மாற உள்ளதாகவும், அதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார்.
தென்காசி தனி மாவட்டமாக உதயமான பின் கடந்த 3 ஆண்டுகளுக்கு பின் இந்தாண்டு சாரல் திருவிழா குற்றாலம் கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. கடந்த 5-ம் தேதி தொடங்கிய சாரல் திருவிழா இன்றுடன் நிறைவு பெற்றது. இதில், நாள்தோறும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகள் நடத்தப்பட்டன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
முதல் நாள் மங்கள இசையுடன் தொடங்கிய விழாவை வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத்துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன், தொழில் மற்றும் தமிழ் வளா்ச்சித்துறை அமைச்சா் தங்கம் தென்னரசு ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்நிலையில், நிறைவு நாளான இன்று சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், சட்டமன்ற உறுப்பினர்கள் பழனி நாடார் ராஜா,சதன் திருமலைக் குமார் நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மதிவேந்தன், சுற்றுலா தல மேம்பாட்டு திட்டத்தின் கீழ் குற்றாலத்திற்கு தனி நிதியாக ரூ.15 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குற்றாலத்தில் பல்வேறு கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு உலக தரம் வாய்ந்த சுற்றுலாதலமாக குற்றாலத்தை மாற்ற தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.
குற்றாலத்தில் வருடம் தோறும் நடைபெறும் சாரல் விழாவினை அடுத்த வருடம் மிக சிறப்பாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்படும். தற்போது, தென்காசி மாவட்டத்தில் உள்ள செங்கோட்டை குண்டாறு அணையை புதிய சுற்றுலாதல திட்டத்தின் கீழ் ரூ.1.50 கோடி ஒதுக்கப்பட்டு, பல்வேறு Eco டூரிஸ்ட் ஹோமில் உள்ளது போல் டெண்ட் போட்டு சுற்றுலா பயணிகள் தங்கும் வகையிலும், நீரில் செய்யும் பல்வேறு சாகச விளையாட்டுகளை விளையாடும் வகையிலும் குண்டாறு அணை சுற்றுலாதலமாக மாற உள்ளது அதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார்.
– இரா.நம்பிராஜன்