ஸ்டேன் சாமி உயிரிழப்புக்கு மத்திய அரசைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் நாளை இடதுசாரிகளின் நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் விசிக பங்கேற்கும் என அக்கட்சித் தலைவர் திருமாவளவன் எம்.பி கூறியுள்ளார்.
84 வயதான ஸ்டேன் சாமி ஜார்கண்ட் மாநிலத்தில் பழங்குடி மக்களிடையே பணியாற்றி வந்திருந்தார். இந்நிலையில் பீமா கொரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கானது பின்னர் என்.ஐ.ஏ வசம் சென்றது. சிறையிலிருந்த அவருக்கு உடல்நலம் மிகவும் மோசமானது. அவர் பார்கின்ஸன் நோயால் பாதிக்கப்பட்டிருந்ததையடுத்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் சிகிச்சைபெற நீதிமன்றம் அனுமதியளித்திருந்தது.
தனது ஜாமீன் வழங்கக்கோரி அவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு பரீசிலனையில் இருந்த நிலையில் மருத்துவமனையில் நேற்று ஸ்டேன் சுவாமி உயிரிழந்தார். இவரது மறைவுக்கு ராகுல் காந்தி, உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் உள்ளிட்டோர் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.
https://twitter.com/thirumaofficial/status/1412666943702650884
இதனையடுத்து ஜூலை 8ம் தேதியன்று தமிழகத்தில் இடதுசாரி கட்சிகள் சார்பில் மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டங்களில் விசிக பங்கேற்கும் என்று அக்கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
“ஜார்கண்ட் மாநிலத்தில் பழங்குடி மக்களுக்கு சேவையாற்றி வந்த 84 வயதான ஸ்டேன்சாமியை பொய் வழக்கில் கைதுசெய்து அவர் மரணமடைவதற்கு பாஜக அரசு காரணமாகியுள்ளது. பாஜக அரசின் கொடுங்கோன்மையைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இடதுசாரிகள் நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் விசிக பங்கேற்கும்” என தெரிவித்துள்ளார்.







