அதிமுக மீண்டும் ஆட்சியமைத்ததும், ஏழை, எளிய மக்கள் அனைவருக்கும் 2023-ம் ஆண்டுக்குள் கான்கிரீட் வீடு கட்டித்தரப்படும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவுபெற்ற நிலையில், அரசியல் கட்சித் தலைவர்களின் பிரச்சாரம் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்கள். விமர்சனங்களுக்கும், பதிலடிகளுக்கு பஞ்சமில்லாமல் பரப்புரை நகர்ந்து வருகிறது.

செங்கல்பட்டு சட்டப்பேரவை தொகுதி வேட்பாளர் கஜேந்திரன் மற்றும் மதுராந்தகம் தொகுதி வேட்பாளர் மரகதம் குமரவேல் ஆகியோரை ஆதரித்து, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் பகுதியில் இன்று பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், 1996 மற்றும் 2006-ம் ஆண்டுகளில் ஆட்சிக்கு வந்த திமுகவினர் மக்களுக்கு ஏதாவது நல்லது செய்தார்களா என கேள்வி எழுப்பினார். எப்படியாவது முதலமைச்ராகிவிட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முயற்சி செய்து வருவதாகவும், அதற்காக பொய்யான வாக்குறுதிகளை பொதுமக்களுக்கு அளித்து வருவதாகவும் ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டினார்.







