டெல்லி தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் உள்ள முண்ட்காவில் மூன்று அடுக்குமாடி அலுவலகக் கட்டிடடத்தில் வெற்றிக்கிழமை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 27 பேர் உயிரிழந்தனர். 70-க்கும் மேற்பட்டோர் பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும், பலர் தீயில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், அவர்களைத் தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதாக வெள்ளிக்கிழமை மாலை 4.45 மணிக்கு தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, 30க்கும் மேற்பட்ட வாகனங்கள் சம்பவ இடத்துக்குச் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. இரவு 10.30 மணி அளவில் தீயணைப்புப் படையினர் போராடி தீ அணைக்கப்பட்டதாக டெல்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.
https://twitter.com/mkstalin/status/1525303297103433728
இந்த தீ விபத்து சம்பவத்துக்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் வருத்தம் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், டெல்லி விபத்தில் பலர் பரிதாபமாக உயிரழந்தது மிகவும் வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் குணமடைய வாழ்த்துகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
https://twitter.com/EPSTamilNadu/status/1525330540932386816
இச்சம்பவம் குறித்து எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், நாட்டையே உலுக்கியுள்ள டெல்லி வணிக வளாக தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதுடன், சிகிச்சை பெற்று வருவோர் பூரண நலம் பெற்று விரைவில் வீடு திரும்ப இறைவனை பிராத்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.








