மதுரையில் கலைஞர் நூலகம் அமைய இருக்கும் இடம் பென்னிகுவிக் இல்லம் என்பதற்கு ஆதாரம் இருந்தால் சொல்லுங்கள் இடமாற்றம் செய்ய தமிழ்நாடு அரசு தயார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் 2021-22ம் ஆண்டிற்கான மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் ராஜூ, மதுரையில் உள்ள பென்னிகுவிக் இல்லத்தை மாற்றி கலைஞர் பெயரில் நூலகம் அமைக்க உள்ளதாக தகவல் வருவதாக கூறினார். அதற்கு குறுக்கிட்டு பேசிய நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், நாங்கள் எதிர்கட்சியாக இருந்த போது எவ்வளவு குறுக்கீடு வந்தது என்பது நினைவில் உள்ளது. இருப்பினும் எதிர்க்கட்சியினர் பேசும்போது குறுக்கிட வேண்டாம் என்று நேற்று முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார் என்று தெரிவித்த அவர், அந்த இல்லம் பென்னிகுவிக் இல்லம் இல்லை என்றும், தவறான கருத்தை பதிவு செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து பேசிய அவர், பென்னிகுவிக் 1841-1911-ல் வாழ்ந்துள்ளார். ஆனால் இந்த இல்லம் அவரது காலத்திற்கு பின் கட்டப்பட்டுள்ளது. எனவே, இது பென்னிக்குயிக் இல்லமாக இருக்க முடியாது என தெரிவித்தார். அதை தொடர்ந்து பேசிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பென்னிகுவிக் இல்லத்தை அப்புறப்படுத்தி கலைஞர் பெயரில் நூலகம் கட்டுவதாக உறுப்பினர் செல்லூர் ராஜூ கூறியுள்ளது தவறான கருத்து என்றார். மேலும், அது பென்னிகுவிக் இல்லம் என்பதற்கான ஆதாரம் இருந்தால் சொல்லுங்கள் அதனை மாற்ற அரசு தயாராக உள்ளதாக தெரிவித்தார். ஆதாரம் இல்லாமல் கருத்தை பதிவு செய்ய வேண்டாம் எனவும், முன்னாள் அமைச்சர் செவிவழி செய்திகளை பேரவையில் பதிவு செய்வது பொருந்ததக்கது அல்ல என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.







