ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றின் அணை பகுதியில் ஆக்கிரமித்து இருந்த அமலை செடிகள் அகற்றும் பணியை பேரூராட்சி தலைவர் துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தாமிரபருணி ஆற்றின் அணை பகுதியில் அமலைச் செடிகள் அதிக அளவில் ஆக்கிரமித்து இருந்தது. இதனால் அணையின் வடகால் மற்றும்
தென்கால் வழியாக பாசன குளங்களுக்கு தண்ணீர் செல்வதில் தடை ஏற்பட்டு வந்தது.
வடகால் கரையோரம் உள்ள நதிக்கரை சுப்பிரமணிய சுவாமி கோவில் படித்துறை பகுதியில் தண்ணீர் தெரியாத அளவிற்கு அமலைச் செடிகள் ஆக்கிரமித்து உள்ளது. இதனால் அங்கு குளிக்க வரும் பெண்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர்.
எனவே அமலைச் செடிகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். மேலும், நதிக்கரையில் உள்ள ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி
திருக்கோவிலில் நாளை வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை
நடைபெற உள்ளது.
இந்நிலையில் ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி நிர்வாகத்தினர் ஸ்ரீ வைகுண்டம் அணை பகுதியில் அமலைச் செடிகள் அகற்றும் பணி இன்று தொடங்கியது. பேரூராட்சி தலைவர் சினேகவள்ளி அமலைச் செடிகளை அகற்றும் பணிகளை தொடங்கி வைத்தார். பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் நதிக்கரை சுப்பிரமணிய சுவாமி கோயில் படித்துறை
அருகே ஆக்கிரமித்து இருந்த அமலைச் செடிகளை அகற்றினர். இதனால் பொதுமக்களும்,
பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
ம. ஶ்ரீ மரகதம்







