இலங்கையின் 9-வது அதிபராக பதவியேற்ற அநுர குமார திசநாயக்க ஒன்றாக இணைந்து எதிர்காலத்தை வடிவமைப்போம் என தெரிவித்தார்.
இலங்கை அதிபர் தேர்தல் நேற்று முன் தினம் நடைபெற்ற நிலையில், மாலையிலேயே வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை முடிவில், தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க, 55 விழுக்காடு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.44 விழுக்காடு வாக்குகளுடன் சஜித் பிரேமதாச இரண்டாம் இடம் பிடித்தார். மூன்றாவது இடத்தை ரணில் விக்ரமசிங்க, நான்காவது இடத்தை நமல் ராஜபக்சவும், 5வது இடத்தை தமிழர்களின் பொது வேட்பாளரான அரியநேந்திரன் பாக்கியசெல்வமும் பிடித்தனர்.

இந்நிலையில், இலங்கையின் 9-வது அதிபராக அநுர குமார திசாநாயக்க இன்று பதவியேற்றுக் கொண்டார். இதன் மூலம் இலங்கையின் முதல் இடதுசாரி அதிபர் என்ற பெருமையுடன் அவர் அதிபராகப் பதவியேற்றார். அவருக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்களும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள் : தமிழ்நாடு, ஆந்திராவின் கூலிப்படை தலைவன்…யார் இந்த #Rowdy சீசிங் ராஜா?
முன்னதாக, பதவியேற்பின் போது உரையாற்றிய அநுர குமார திசாநாயக்க கூறியதாவது:
“எனக்கு வாக்களிக்காத மக்களின் நம்பிக்கையை ஊக்குவிக்கும் வகையில் பணியாற்றுவேன். மக்களின் விருப்பங்களை பூர்த்தி செய்யும் வகையில் பணியாற்றுவேன். சிங்களர்கள், தமிழர்கள், இஸ்லாமியர்கள் ஒற்றுமையே புதிய தொடக்கத்துக்கான அடித்தளம். ஒன்றாக இணைந்து எதிர்காலத்தை வடிவமைப்போம். பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல வேண்டியது அவசியம்”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.







