இலங்கையில் போராட்டம் – கண்ணீர் புகைக் குண்டு வீச்சு

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச பதவி விலக வலியுறுத்தி கொழும்பில் நடைபெற்ற போராட்டத்தில், கண்ணீர் புகைக் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.   இலங்கையில் பொருளாதார நெருக்கடி அதிகரித்ததை அடுத்து, இலங்கையில் பிரதமராக இருந்த…

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச பதவி விலக வலியுறுத்தி கொழும்பில் நடைபெற்ற போராட்டத்தில், கண்ணீர் புகைக் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

இலங்கையில் பொருளாதார நெருக்கடி அதிகரித்ததை அடுத்து, இலங்கையில் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக சில மாதங்களுக்கு முன்பு போராட்டம் நடைபெற்றது.

இதையடுத்து அவர் பதவி விலகினார். புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவி ஏற்றார்.

ரணில் விக்ரமசிங்கே பதவி ஏற்று ஏறக்குறைய 2 மாதங்கள் ஆகின்றன. எனினும், இலங்கையில் நிலைமை சீரடையவில்லை. மாறாக, மேலும் மோசடைந்து வருகிறது.

இதை கண்டிக்கும் வகையிலும், இலங்கையின் பொருளாதார சிக்கலுக்குத் தீர்வு காண தவறியதால் கோத்தபய ராஜபக்சவும், ரணில் விக்ரமசிங்கவும் பதவி விலக வலியுறுத்தியும் பொதுமக்கள் சார்பில் தலைநகர் கொழும்பில் இன்று போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் உள்பட பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

அதிபர் கோத்தபய ராஜபக்ச மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், அவர் அங்கிருந்து வேறு பாதுகாப்பான இடத்துக்குச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.

ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டுள்ள நிலையில், அவர்கள் உள்ளே சென்றுவிடாமல் தடுக்க போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி கூட்டத்தை கலைக்க முயன்றனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முன்னதாக, போராட்டக்காரர்கள் கூடுவதைத் தடுக்க கொழும்பு மற்றும் புறநகரின் முக்கிய பகுதிகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன,

இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகமும், ஐநா அமைப்பும் இதற்கு கண்டனம் தெரிவித்தன. அமைதியான முறையில் போராட்டம் நடத்த அனுமதிக்கப்பட வேண்டும் என்று அவை வலியுறுத்தின.

இதை அடுத்து ஊரடங்கு உத்தரவு ரத்து செய்யப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.