பாட்னாவில் இருந்துடெல்லி நோக்கி புறப்பட்ட பயணிகள் விமானம் நடுவானில் தீ பிடித்ததை அடுத்து அந்த விமானம் பாட்னாவில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் ஒன்று இரண்டு குழந்தைகள் உள்பட 185 பயணிகளுடன் பிகார் தலைநகர் பாட்னாவில் இருந்து டெல்லி நோக்கி புறப்பட்டது. விமானம் நாடுவானில் சென்று கொண்டிருந்தபோது அதன் என்ஜினில் தீ பிடித்துள்ளது.
விமானப் பணியாளர்கள் யாரும் இதை கவனிக்கவில்லை. அதேநேரத்தில், உள்ளூர் மக்கள் இதை கவனித்து மாவட்ட நிர்வாகத்திற்கும், விமான நிலைய அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து விமானிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் விமானத்தை அவசர அவசரமாக மீண்டும் பாட்னா விமான நிலையத்திற்கு திருப்பி விமானத்தை தரையிறக்கினார்.
பயணிகள் அனைவரும் பத்திரமாக தரையிறக்கப்பட்டனர். விமான என்ஜில் இருந்த தீயும் அணைக்கப்பட்டது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாட்னா மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சிங், விமானத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து உள்ளூர் மக்கள் அளித்த தகவலின்பேரில் விமானம் பாட்னா விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டதாகத் தெரிவித்தார். விமானத்தில் இருந்த 185 பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர் என குறிப்பிட்ட அவர், தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாகக் கூறினார்.
விமானத்தின் ஒரு என்ஜினில் தீ விபத்து ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள பாட்னா விமான நிலைய இயக்குநர், பத்திரமாக மீட்கப்பட்ட 185 பயணிகளுக்கும் மாற்று விமானத்தை ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளதாகத் தெரிவித்தார்.
விமானம் நடுவானில் பயணித்துக்கொண்டிருந்தபோது தீ விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.










