“ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஒபிஎஸ் ஒத்து போவது நல்லது” – முன்னாள் அமைச்சர் சிவபதி

“ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஒபிஎஸ் ஒத்து போவது நல்லது” என முன்னாள் அமைச்சர் சிவபதி கூறியுள்ளார். அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்த சர்ச்சை தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும்…

“ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஒபிஎஸ் ஒத்து போவது நல்லது” என முன்னாள் அமைச்சர் சிவபதி கூறியுள்ளார்.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்த சர்ச்சை தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தொடர்ந்து தங்களது ஆதரவு மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

அதிமுகவில் மொத்தம் 75 மாவட்ட செயலாளர்கள் உள்ளனர். இதில் ஓ.பி.எஸ்க்கு 11 மாவட்ட செயலாளர்களும், இ.பி.எஸ்க்கு 64 மாவட்ட செயலாளர்களும் ஆதரவு தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஒபிஎஸ் ஒத்து போவது நல்லது என முன்னாள் அமைச்சர் சிவபதி கூறியுள்ளார். சென்னை பசுமைவழி சாலையில் உள்ள எடப்பாடி பழனிச்சாமி இல்லத்தில் அவரை சந்தித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் சிவபதி இவ்வாறு கூறினார்.

மேலும், “கடந்த 4 ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி நடத்தியவர் எடப்பாடி பழனிச்சாமி. இவருக்கு 100 சதவிகிதம் இளைஞரணி பெண்கள் பாசறை ஆதரவு உள்ளது. ஒற்றை தலைமை ஏற்பது குறித்து பார்க்கலாம் என எடப்பாடி பழனிச்சாமி என்னிடம் கூறினார்” என பேட்டியில் கூறியுள்ளார்.

இந்நிலையில் அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கியுள்ளது. இதில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். எடப்பாடி பழனிசாமி தரப்பில் செங்கோட்டையன், தம்பிதுரை, செல்லூர் ராஜு ஆகியோர் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.