சட்டப்பேரவையில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உள்ளாட்சி அமைப்புகளில் பழுதடைந்த சாலைகளை மேம்படுத்த சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டு நடப்பாண்டிலேயே புதிதாக கட்டப்படும் என்றார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாளான இன்று கேள்வி நேரத்துடன் தொடங்கியது. அப்போது, உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்தனர். இதைத்தொடர்ந்து 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டை வளமான, வலிமையான மாநிலமாகவும், அனைத்து துறைகளிலும் முன்னணி மாநிலமாக மாற்றவும் பல திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது என கூறினார்.
சமூக மேம்பாட்டிலும், தனி மனித வளர்ச்சியிலும் கவனம் செலுத்தும் வகையில் நாள்தோறும் பல திட்டங்களை தீட்டி வருகிறோம். அனைவரின் நலனை முன்னிறுத்தியே திட்டங்கள் தீட்டப்படுகிறது. இதுவரை 3,337 அறிவிப்புகளை வெளியிடப்பட்டுள்ளோம். அறிவிப்புகளின் நிலை கண்காணிக்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 78% அறிவிப்புகள், அதாவது 2,607 அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளன என்றார். எஞ்சிய அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடவும், அரசாணை வெளியிட்டவற்றை செயல்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் தரமான கல்வியை அரசுப்பள்ளிகள் வழங்கி வருவதாக கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த 2 ஆண்டுகளில் சுமார் 15 லட்சம் மாணவர்கள் அரசுப்பள்ளிகளில் புதிதாக சேர்ந்துள்ளனர்.
புதிதாக சேர்ந்த மாணவர்களின் வசதிக்காக அரசுப்பள்ளிகளில் ஆயிரத்து 50 கோடி ரூபாய் மதிப்பில் 7,200 வகுப்பறைகள் நடப்பு ஆண்டிலேயே புதிதாக கட்டப்படும் என தெரிவித்தார். அரசுப்பள்ளிகளில் பாதுகாப்பான கற்றல் சூழல் உறுதி செய்யப்படும் என்றார். உள்ளாட்சி அமைப்புகளில் பழுதடைந்த அனைத்து சாலைகளையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான சிறப்பு நிதியாக ரூ.2,200 கோடி வழங்கப்பட்டு 4,600 கி.மீ., நீளமுள்ள சாலைகள் நடப்பு ஆண்டிலேயே மேம்படுத்தப்படும். ரூ.7,388 கோடி மதிப்பில் 16,390 கி.மீ., நீளமுள்ள சாலைகள் படிப்படியாக மேம்படுத்தப்படும் என கூறினார். 1.70 கோடி பயணிகள் அரசுப் பேருந்துகளில் பயணித்து வருகின்றனர். 44 லட்சம் பெண் பயணிகள் சராசரியாக இலவசமாக பயணம் செய்து வருகின்றனர். 2 ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான பணம் மகளிருக்கு சேமிப்பாக மாறியுள்ளது.
இதை அரசு வருமான இழப்பாக கருதவில்லை, மகளிருக்கான வளர்ச்சியாகவே இதை பார்க்கிறோம். ரூ.500 கோடி மதிப்பில் 1,000 புதிய பேருந்துகளை வாங்க அரசு முடிவு எடுத்துள்ளது. நல்ல நிலையில் உள்ள 1,000 பழைய பேருந்துகளை புதுப்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2,013 டீசல் பேருந்துகள், 500 மின்சார பேருந்துகளை வாங்கிட நடவடிக்கை எடுத்து சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்யும் அரசாக திமுக உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.








