ஆயுத பூஜை பண்டிகையையொட்டி சொந்த ஊர் செல்பவர்களுக்கான சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகிறது.
போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க சென்னை மாநகரில் கோயம்பேடு, பூந்தமல்லி மற்றும் தாம்பரம் ஆகிய பகுதிகளில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை, விஜய தசமி என அடுத்தடுத்து அரசு விடுமுறை மற்றும் வார இறுதி விடுமுறை காரணமாக நடப்பாண்டில் ஆயுத பூஜை பண்டிகையையொட்டி ஏராளமான பொதுமக்கள் சொந்த ஊருக்குச் செல்ல திட்டமிட்டுள்ளனர்.
ஏற்கனவே தென் மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களுக்கு செல்லக்கூடிய ரயில்களில் டிக்கெட் விற்பனை நிறைவுபெற்று விட்ட நிலையில் தட்கல் முறையில் டிக்கெட் விலை முன்பதிவு செய்ய ஏராளமானோர் திட்டமிட்டுள்ளனர்.
ஆம்னி பேருந்துகளை பொருத்தமட்டிலும் வழக்கம் போலவே விடுமுறை காலத்தை பயன்படுத்தி கூடுதல் கட்டணத்துடன் பேருந்துகளை இயக்கி வருகின்றனர்.
எனவே பொதுமக்களுடைய அடுத்த தேர்வாக அரசு போக்குவரத்து கழகம் இருந்து வருகிறது. அதன்படி தொடர் விடுமுறை வருவதையொட்டி வெளியூர் பயணம் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் சென்னையில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்க போக்குவரத்து துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி இன்று மற்றும் நாளை 2 நாட்களுக்கு தினசரி இயக்கப்படுகின்ற 2,100 பஸ்களுடன் கூடுதலாக 2,050 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதே போல் பிற முக்கிய மாநகரிலிருந்து மற்ற மாவட்டங்களுக்கு 1,650 சிறப்பு பஸ்கள் இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
சிறப்பு பேருந்துகள் பொருத்தமட்டில் மாநகரப் பகுதிக்குள் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க வெவ்வேறு வழித் தடங்களில் இயங்கக்கூடிய பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையம், தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிறுத்தம், பூந்தமல்லி பை பாஸ் ஆகிய 3 பகுதிகளில் இருந்து இயக்கப்பட உள்ளது.
தாம்பரம் பேருந்து நிலையத்தில் திண்டிவனம் மார்க்கமாக புதுச்சேரி கடலூர் மற்றும் திருவண்ணாமலை செல்லக்கூடிய பேருந்துகளும், பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் காஞ்சிபுரம் ஓசூர் மற்றும் திருப்பதி செல்லக்கூடிய பேருந்துகளும், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இசிஆர், திருச்சி, மதுரை மார்க்கமாக செல்லக்கூடிய பேருந்துகள் மற்றும் கோவை திருப்பூர் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
தற்போது வரை 80 சதவீத பேருந்துகளுக்கு முன்பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு கூடுதல் பேருந்துகளை இயக்கவும் போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது.
ஏராளமான பொதுமக்கள் இன்று முதல் வெளியூர் செல்ல இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க மாநகரப் பகுதிகள் முழுவதும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.