7வது நாளாக தொடரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்கை பாதிப்பு!

மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில் 7வது நாளாக தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பாபநாசம், மணிமுத்தாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், 7ஆவது நாளாக தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு…

மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில் 7வது நாளாக தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

பாபநாசம், மணிமுத்தாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், 7ஆவது நாளாக தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மணிமுத்தாறு, பாபநாசம், அம்பாசமுத்திரம், வீரவநல்லூர், கல்லிடைக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள நெல், வாழை ஆகிய பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. மேலும் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆழ்வார்திருநகரி பகுதியில் முஸ்லிம் தெரு, வ.உ.சி நகர் உள்ளிட்ட பகுதிகளில் தாமிரபரணி ஆற்றின் வெள்ள நீர் புகுந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

களக்காடு பகுதியில் தொடர் மழையால் நூற்றுக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தொடர் மழையால் நாங்குநேரியான் கால்வாயில் ஏற்பட்ட வெள்ளத்தால் மூங்கிலடி பாலம், சிதம்பரபுரம் செல்லும் வழியில் உள்ள பாலங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் பல்வேறு இடங்களில் லேசான மண் சரிவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக உதகையில் இருந்து மஞ்சூர் வழியாக கின்னகொரை செல்லும் நெடுஞ்சாலையில் பாறைகள் சரிந்து விழுந்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply