காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி மூச்சு குழாயில் பூஞ்சை தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது வீடு திரும்பியுள்ளார்.
கடந்த 2ம் தேதி கொரோனா தொற்று பாதிக்கப்பட்டார். வீட்டிலேயே தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், 12ம் தேதி திடீரென மூக்கிலிருந்து ரத்த கசிவு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் டெல்லி கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூச்சு குழாயில் பூஞ்சை தொற்று ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது.
கொரோனா தொற்றுக்கு பிந்தைய அறிகுறிகளுக்கான சிகிச்சையுடன் சேர்த்து பூஞ்சை பாதிப்புக்கும் சிகிச்சையளிக்கப்படுவதாக அக்கட்சி வெளியிட்டிருந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார் என்றும், தொடர்ந்து ஓய்வெடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் மாநிலங்களவை உறுப்பினர் ஜெயராம் ரமேஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக நேஷனல் ஹெரால்ட் பண மோசடி வழக்கில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என கடந்த 8ம் தேதி அமலாக்கத்துறை சோனியாவுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. ஆனால் கொரோனா தொற்று பாதிப்பு சிகிச்சை பெற்று வருவதால் விசாரணைக்கு ஆஜராவதற்கு கால அவகாசத்தை அவர் கோரியிருந்தார்.
https://twitter.com/Jairam_Ramesh/status/1538866192433041408
இந்நிலையில் வரும் 23ம் தேதி விசாரணைக்காக ஆஜராக வேண்டும் என மீண்டும் அமலாக்கத்துறை அழைப்பாணை விடுத்திருக்கிறது. இதற்கிடையில் சோனியாவின் மகனும், காங்கிரஸின் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி கடந்த 13ம் தேதி முதல் தொடர்ந்து 4 நாட்களுக்கு அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகியிருந்தார்.
கடந்த 2010ல் அசோசியட் ஜார்னல்ஸ்க்கு சொந்தமான நேஷனல் ஹெரால்ட் பத்திரிகையை காங்கிரஸ் விலைக்கு வாங்கியது. இதில் பெரிய அளவில் பண மோசடி ஏற்பட்டுள்ளதாக பாஜகவின் சுப்பிரமணிய சுவாமி வழக்கு தொடர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.







