தமிழகம் முழுவதும் இம்மாதம் 23ம் தேதி கருப்புக்கொடி ஏந்தி தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் நிருவாகிகள் அவரச ஆலோசனை கூட்டம் மன்னார்குடியில் இன்று நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பி.ஆர்.பாண்டியன், தமிழக அரசின் அனைத்து கட்சி குழு இம்மாதம் 23ம் தேதி டெல்லி செல்வது வரவேற்கத்தக்க ஒன்றாக இருந்தாலும் ஜல்சக்தி துறையின் அமைச்சரை சந்தித்து மேகதாது அணை வரைவுத் திட்ட அறிக்கையை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளக் கூடாது என வலியுறுத்த உள்ளதாக தெரிவித்திருப்பது தமிழக அரசு கர்நாடக அரசுக்கு துணை போகிறதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணாக காவிரி மேலாண்மை ஆணையத்தை வலியுறுத்துவதால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், தமிழக-கர்நாடக உறவில் தகராறு ஏற்பட்டுள்ளதாகவும், கர்நாடக தமிழர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் பிஆர்.பாண்டியன் தெரிவித்தார்.
சட்டவிரோதமாக மேகதாது அணை கட்ட அனுமதிக்கும் நோக்கோடு வரைவுத் திட்ட அறிக்கையை விவாதத்திற்கு ஏற்றுக்கொண்டுள்ள காவிரி மேலாண்மை ஆணையத்தை கண்டித்து இம்மாதம் 23ம் தேதி காவிரி டெல்டா மாவட்டங்களின் விவசாயிகள் பங்கேற்கும் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தை திருவாரூரில் நடத்த இருப்பதாக தெரிவித்தார். 23ம் தேதி காலை விவசாயிகள் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பை பதிவு செய்வது என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெற்றுத்தந்த காவிரி மேலாண்மை ஆணையத்தை பறிக்க பாஜக அரசு முயற்சிக்கிறது. இதனை தடுக்க ஆணையத்தை பாதுகாக்க அதிமுக-வினர் உள்கட்சி சண்டைகளை மறந்து களத்தில் இறங்கி போராட முன் வர வேண்டும் என்றும் பி.ஆர்.பாண்டியன் கேட்டுக்கொண்டார். காவிரி உரிமையை அபகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதை உணர்ந்து காவிரி டெல்டா மாவட்டங்களில் வணிகர்கள் தங்களே முன்வந்து கடைகளை அடைத்து விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்க முன்வர வேண்டும் எனவும் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.