நேஷ்னல் ஹெரால்டு நிதி முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை விசாரணையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆஜரானார்.
யங் இந்தியா நிறுவனத்தில் தலா 38 சதவீத பங்குகளை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் அவரது மகன் ராகுல் காந்தியும் வைத்துள்ளனர். இந்த யங் இந்தியா நிறுவனம், சுதந்திரப் போராட்ட தலைவர்கள் அளித்த நிதியைக் கொண்டு ஜவஹர்லால் நேருவால் உருவாக்கப்பட்ட நேஷ்னல் ஹெரால்டு பத்திரிகையையும், அந்த பத்திரிகையை நடத்தி வந்த நிறுவனத்தையும் கையகப்படுத்தியது.
இதில் நிதி முறைகேடு நடந்துள்ளதாக பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி கடந்த 2013ம் ஆண்டு கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரித்த வருமான வரித்துறை, சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
இந்த முறைகேடு குறித்து விசாரிக்க முகாந்திரம் உள்ளதாக டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, இது குறித்து அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்த வழக்கில் ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.
அப்போதே சோனியா காந்தியையும் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.
எனினும், சோனியா காந்திக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் விசாரணை தள்ளிப் போனது.
இதனையடுத்து இன்று விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சோனியா காந்திக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இதன் காரணமாக, டெல்லியில் உள்ள தனது வீட்டில் இருந்து மகள் பிரியங்கா காந்தி வத்ராவுடன் காரில் புறப்பட்ட சோனியா காந்தி, அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு வந்து விசாரணையில் ஆஜரானார்.
சோனியா காந்தியின் மகன் ராகுல் காந்தியும் அமலாக்கத்துறை அலுவலகம் விரைந்துள்ளார்.
நண்பகல் 12 மணி அளவில் அமலாக்கத்துறை அலுவலகம் வந்த சோனியா காந்தியிடம், அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, சோனியா காந்தியிடம் விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் டெல்லியில் போராட்டங்களில் ஈடுபட்டனர்.








