தமிழ்நாடு அரசு எந்த ஒரு தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கும ஆதரவு கொடுப்பது கிடையாது என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், சிறைச்சாலைகளில் சிம் கார்டுகள் உள்ளிட்டவற்றை புழக்கத்தில் விடுவதற்கு உதவி செய்யும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார். அவர்கள் மீது பணிநீக்கம் மற்றும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.
தமிழ்நாடு அரசு எந்த ஒரு தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கும் ஆதரவு கொடுப்பது கிடையாது என விளக்கமளித்த அமைச்சர் ரகுபதி, அதுவும் ஆட்சியில் இருக்கும் போது ஆதரவு எங்களால் கொடுக்க முடியாது என்றும் தெரிவித்தார்.
குட்கா வழக்கில் வழக்கு பதிவு செய்வதற்கு சிபிஐ தமிழக அரசிடம் அனுமதி கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது தொடர்பான கேள்விக்கு, இது புதிய கடிதமா அல்லது கடந்த ஆட்சி காலத்தில் வந்த கடிதமா என்பது குறித்து சென்னைக்கு சென்ற பிறகு அதிகாரிகளோடு கலந்து ஆலோசனை செய்த பிறகு தான் கூற முடியும் என்றார். இருப்பினும் உண்மை தன்மை இருந்தால் நடவடிக்கை எடுப்பதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்கும் என அமைச்சர் ரகுபதி கூறினார்.
– இரா.நம்பிராஜன்








