செல்போன் அதிகம் பயன்படுத்துவதை தந்தை கண்டித்ததால், 12ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார்.
சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் காமராஜபுரத்தை சேர்ந்தவர் இக்னேஷ் சுந்தர். இவருடைய மகன் சேவியர் பிரகாஷ். இவர் 12ம் வகுப்பு படித்து வந்தார். கொரோனா பாதிப்பு காரணமாக மாணவர்களுக்கு ஆன்லைன் வழியிலேயே வகுப்புகள் நடந்து வருகிறது. மாணவர் சேவியர் பிரகாஷ் ஆன்லைன் வகுப்புகள் மட்டுமல்லாமல் பெரும்பாலான நேரங்களில் செல்போனையே அதிகம் பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அவரது தந்தை மகனை கண்டித்துள்ளார். மேலும் சம்பவத்தன்று தனது மகன் செல்போன் பயன்படுத்திக் கொண்டிருக்கும் போது அவரை திட்டியுள்ளார். இந்நிலையில் இன்று காலை அவரது தந்தை வேலைக்குச் சென்ற நிலையில் சேவியர் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். தந்தை திட்டியதால் மனமுடைந்த அவர், யாரும் இல்லாத நேரத்தில் மின் விசிறியில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த சங்கர் நகர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.







