தமிழகத்தில் இரண்டு கட்டமாக தேர்தல் நடத்துவது பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் இரண்டு கட்டமாக தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் தமிழகத்தில் இரண்டு கட்டமாக தேர்தல் நடத்துவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கவில்லை என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கமளித்துள்ளார். இதுதொடர்பாக எந்தவிதமான பரிந்துரையும் செய்யவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கொரனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கூடுதலாக 30 ஆயிரம் மையங்கள் அமைக்கப்பட இருப்பதாகவும் கடந்த சட்டமன்ற தேர்தலை ஒப்பிடும் போது இந்த தேர்தலுக்கு கூடுதலாக ஒருலட்சத்திற்கும் அதிகமான அரசு பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஏற்கெனவே வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் திட்டமிட்டபடி வரும் 20 ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் எனவும் சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.







