நாகை, காரைக்கால் மாவட்டங்களில் தொழிற்சாலையிலிருந்து திடிரென பரவிய புகை மூட்டத்தால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.மேலும் வயதான முதியவர்கள் சுவாசக் கோளாறினால் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.
நாகப்பட்டினம் மாவட்டத்தின் சுற்றுவட்ட பகுதிகளான நாகூர், வெள்ளிப்பாளையம், புத்தூர், திட்டச்சேரி, திருமருகல், வேளாங்கண்ணி உள்ளிட்ட இடங்களிலும் காரைக்கால் மாவட்டத்தில் நிரவி, டி.ஆர்.பட்டினம், மற்றும் திருநள்ளாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திடிரென பரவிய புகை மூட்டத்தால் பொதுமக்கள் பெரும் அச்சம் அடைந்தனர்.
மேலும் வயதான முதியவர்கள் சுவாசக் கோளாறினால் பெரும் அவதிக்குள்ளாகினர். இச்சம்பவம் அறிந்த நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் புகை பரவல் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டார்.
இதனை அடுத்து நாகப்பட்டினம் தீயணைப்பு துறையினர் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது காரைக்கால் மாவட்டம் வாஞ்சூர் பகுதியில் உள்ள பழைய இரும்பு உருக்கும் தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய புகை என கண்டறியப்பட்டது. காற்று சுழற்சி இல்லாத காரணத்தினால் நாகை, காரைக்கால் பகுதிகளில் புகை சூழ்ந்துள்ளது என அறியப்பட்டது.
இதனை அடுத்து இரும்பு உருக்கும் பணியை நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் நிறுத்த உத்தரவிட்டார். மேலும் புகை மூட்டம் குறித்து பொதுமக்கள் அச்சம் பட வேண்டாம் எனவும் தெரிவித்தார்.








