ரூ.15 ஆயிரத்தில் இரவிலும், பகலிலும் பயணம் செய்யக்கூடிய சோலார் சைக்கிளை உருவாக்கிய கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அத்தாணி பெருமுகை புதூரில் செயல்பட்டு வரும் கொங்கு வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வருபவர்கள் நவீன் குமார் மற்றும் சபரி. ஒரே வகுப்பில் படிக்கும் இந்த இரு நண்பர்களுக்கும் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவதில் ஆர்வம் அதிகம். இந்த நிலையில் இருவரும் இணைந்து சோலாரில் இயங்கும் சைக்கிள் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சோலார் சைக்கிளை உருவாக்க தேவையான ஒளிரும் தகடுகள், பேட்டரி, உள்ளிட்ட பல்வேறு உதிரி பாகங்களை பழைய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் வாங்கியுள்ளனர். தொடர்ந்து 5 நாட்களாக தீவிர முயற்சிக்கு பின், பகலில் சூரிய ஒளியின் மூலமாகவும், சேமிக்கப்பட சூரிய ஒளியின் மூலம் உருவான மின்ஆற்றலைக் கொண்டு இரவிலும் இயங்கக் கூடிய சைக்கிளை உருவாக்கியுள்ளனர். மணிக்கு 30 மைல் வேகத்தில் செல்லக்கூடிய திறன் கொண்டது இந்த சைக்கிள்.
இதனையடுத்து அவர்கள் தயாரித்த சோலார் சைக்கிளை, அவர்கள் படித்து வரும் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில் அறிமுகம் செய்தனர். இந்த நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பள்ளியின் முதல்வரும், அறிவியல் ஆசிரியருமான எஸ்.நளினி செங்கோட்டையன் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களும், ஆசிரியர்களும் கலந்துகொண்டனர். புதிய சோலார் சைக்கிளை கண்டுபிடித்த 2 மாணவர்களுக்கும் கைகளை தட்டி உற்சாகப்படுத்தி அனைவரும் வாழ்த்துகளை தெரித்தனர்.
இந்த சோலார் சைக்கிள் உருவாக்கியது குறித்து நவீன் மற்றும் சபரி, ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசியபோது, “இந்த சைக்கிளை 15 ஆயிரம் செலவில் ஐந்து நாட்களில் உருவாக்கி முடித்தோம். இதற்கு மின்சாரம் முற்றிலும் தேவையில்லை. இது போன்ற சோலார் சைக்கிளை வாங்க விரும்பும் பள்ளி மாணவர்களுக்கு வெறும் 15 ஆயிரம் ரூபாய் செலவி்ல் இரண்டே நாட்களில் உருவாக்கி தருவதற்கு தயாராக உள்ளோம்” என்று தெரிவித்தனர்.