இந்தியாவில் கால்டாக்சி ஓட்டுனர், உணவு வினியோக ஊழியர்கள் உள்ளிட்ட 400 வகையான தொழில்களை செய்யும் பணியாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு வழங்க வகை செய்யப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின் போது, செயலிகளின் அடிப்படையில் பணியாற்றும் கால்டாக்சி ஓட்டுனர், உணவு வினியோக ஊழியர்களின் நலன்கள், உரிமைகள், சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்ய ஏதேனும் கொள்கைத் திட்டத்தை மத்திய அரசு வைத்திருக்கிறதா? என்று பாட்டாளி மக்கள் கட்சியின் உறுப்பினர்
அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதற்கு எழுத்து மூலம் பதிலளித்த மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணை அமைச்சர் ராமேஸ்வர் தெலி, 2020-ஆம் ஆண்டின் சமூகப் பாதுகாப்பு
விதிகளில் முதன்முறையாக ஜிக் பணியாளர்கள் எனப்படும் தற்காலிக ஒப்பந்தப் பணியாளர்கள் குறித்த வரையறை சேர்க்கப்பட்டிருக்கிறது. பணியின் போது உயிரிழப்பு, ஊனம் ஏற்படுதல் ஆகியவற்றுக்கு இழப்பீடு, விபத்துக் காப்பீடு, மருத்துவம் மற்றும் மகப்பேறு பயன்கள், முதுமைக்கால பாதுகாப்பு போன்ற விஷயங்களில் பொருத்தமான சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை வகுக்க 2020-ஆம் ஆண்டின் சமூகப் பாதுகாப்பு விதிகள் வகை செய்கின்றன என பதிலளித்துள்ளார்.
இதற்காக சமூகப் பாதுகாப்பு நிதியம் ஒன்றை ஏற்படுத்தவும் இந்த விதிகள் வகை செய்கின்றன. இத்தகைய தொழிலாளர்கள் பணியாற்றும் நிறுவனங்கள், அவற்றின் ஆண்டு
வருமானத்தில் 1 முதல் 2% தொகையை, அது ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் 5 விழுக்காடுக்கு மிகாத அளவில், சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு
பங்களிக்க வேண்டும்.
மேலும் தற்காலிக ஒப்பந்தப் பணியாளர்கள் உள்ளிட்ட அமைப்பு சாரா தொழிலாளர்கள் அவர்களைப் பற்றிய விவரங்களை பதிவு செய்து கொள்ளவும், அவர்களைப்
பற்றிய தகவல் தொகுப்பை உருவாக்கவும் இணையதளம் ஒன்றும் கடந்த ஆண்டு ஆகஸ்டு 26-ம் தேதியன்று உருவாக்கப்பட்டிருக்கிறது என மத்திய இணை அமைச்சர் ராமேஸ்வர் தெலி பதிலளித்துள்ளார்.
– இரா.நம்பிராஜன்