சமூகநீதியை கண்காணிக்கக் குழு: முதலமைச்சர் அறிவிப்பு

சமூகநீதியை கண்காணிக்கக் குழு அமைக்கப்படும் என முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 1920ம் ஆண்டு நடந்த முதல் தேர்தலில் வென்ற நீதிக்கட்சி,  சமூகநீதி, தீண்டாமை ஒழிப்பு, ஒடுக்கப்பட்டோர் உரிமை, சுயாட்சிக் கருத்துகள் ஆகியவற்றை பல்வேறு அரசாணைகள்…

சமூகநீதியை கண்காணிக்கக் குழு அமைக்கப்படும் என முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

1920ம் ஆண்டு நடந்த முதல் தேர்தலில் வென்ற நீதிக்கட்சி,  சமூகநீதி, தீண்டாமை ஒழிப்பு, ஒடுக்கப்பட்டோர் உரிமை, சுயாட்சிக் கருத்துகள் ஆகியவற்றை பல்வேறு அரசாணைகள் மூலமாகச் செயல்படுத்தியது. அதில் முக்கியமானதான சமூகநீதி அரசாணை வெளியிடப்பட்டு 100 ஆண்டுகள் ஆகிறது.

இந்த நிலையில் சமூகநீதி அரசாணையின் நூற்றாண்டு நாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், 100 ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்ட அரசாணைதான் சமூகநீதிக்கான அடித்தளம் ஆகும். அதிலிருந்துதான் சமூகநீதி வரலாற்றின் மாபெரும் பயணம் தொடங்கியது. இந்த சமூகநீதி அரசாணையானது தமிழ்நாடு எல்லையைக் கடந்து இந்தியா முழுவதும் இன்று வெற்றி நடைபோட்டு வருகிறது என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து, சமூகநீதி அளவுகோலானது சட்டப்படி இருக்கிறது. ஆனால் முழுமையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிப்பதற்காக தமிழ்நாடு அரசால் ஒரு கண்காணிப்புக் குழுவை அமைக்க முடிவெடுத்துள்ளோம். கல்வி, வேலைவாய்ப்பு, பதவிகள், பதவி உயர்வுகள், நியமனங்கள் ஆகியவற்றில் சமூகநீதி அளவுகோல் முறையாக, முழுமையாகப் பின்பற்றப்படுகிறதா என்பதை இக்குழு கண்காணிக்கும் என்று தெரிவித்த முதலமைச்சர்,

சமூகநீதி சரியாக நடைமுறைப்படுத்த படாவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்கு இக்குழு பரிந்துரை செய்யும். இதற்கான விதிமுறைகள் விரைவில் வெளியிடப்படும். இதில் அரசு அதிகாரிகள், கல்வியாளர்கள், சட்ட வல்லுநர்கள் இடம்பெறுவார்கள் என்றும் அறிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.