சீர்காழி கல்யாண ரெங்கநாதர் கோயில் தெப்ப உற்சவம் – ஆரத்தி எடுத்து பக்தர்கள் வழிபாடு!

சீர்காழி அருகே திருநகரி அமிர்தவல்லி தாயார் சமேத கல்யாண ரெங்கநாதர் கோயில் தெப்ப உற்சவத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீப ஆரத்தி எடுத்து வழிபாடு செய்து தரிசித்தனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருநகரியில், 108 திவ்யதேசங்களில்…

சீர்காழி அருகே திருநகரி அமிர்தவல்லி தாயார் சமேத கல்யாண ரெங்கநாதர்
கோயில் தெப்ப உற்சவத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீப ஆரத்தி எடுத்து வழிபாடு செய்து தரிசித்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருநகரியில், 108 திவ்யதேசங்களில்
37வது தலமான அமிர்தவள்ளி தாயார் சமேத கல்யாணரெங்கநாதர் கோயில்
அமைந்துள்ளது.  இது திருமங்கை ஆழ்வார், குரசேகர ஆழ்வார் ஆகியோரால் மங்களா சாசனம் செய்யப்பட்ட ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயிலாகும்.  திருமங்கை ஆழ்வார் அவதார ஸ்தலமாக கருதப்படும் இக்கோயிலில் பங்குனி பெருவிழா கடந்த மாதம் 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

இவ்விழாவின் முக்கிய நிகழ்வான தெப்ப உற்சவம், பன்னிரண்டாம் நாள் திருவிழாவான நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது.  தெப்ப உற்சவம் தீர்த்த குளமான புஷ்கரணியில் நடைபெற்றது.  தெப்ப உற்சவத்தை முன்னிட்டு அமிர்தவள்ளித் தாயார் சமேத கல்யாண ரெங்கநாதருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.

தொடர்ந்து பெருமாள், தாயார், திருமங்கையாழ்வார் மற்றும் ராமானுஜர் பல்லக்கில் புஷ்கரணிக்கு அங்கு அலங்கரிக்கப்பட்டிருந்த தெப்பத்தில் எழுந்தருளினர்.  இதையடுத்து தெப்பம் மூன்று முறை தீர்த்தக்குளத்தை வலம் வந்தது.  அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீப ஆரத்தி எடுத்து வழிபாடு செய்து தரிசித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.