ஒற்றைத் தலைமை விவகாரம்: ஓபிஎஸ்-க்கு ஆர்.பி.உதயகுமார் முன்வைத்த கோரிக்கை

ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஒற்றைத் தலைமையை ஏற்க வேண்டும் என தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வேண்டுகோள் விடுத்தார். ராமநாதபுரத்தில் அதிமுக கட்சி நிர்வாகி மணிகண்டன்…

ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஒற்றைத் தலைமையை ஏற்க வேண்டும் என தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வேண்டுகோள் விடுத்தார்.

ராமநாதபுரத்தில் அதிமுக கட்சி நிர்வாகி மணிகண்டன் இல்ல காதணி விழாவிற்கு வருகை புரிந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நிகழ்ச்சியில் கலந்து
கொண்டு, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

அதிமுகவின் ஒட்டுமொத்த மெஜாரிட்டியை அனைவரும் மனம் விருப்பு வெறுப்பின்றி
ஏற்றுக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களின் விருப்பத்திற்கு ஏற்ப நான்காண்டு காலம் சிறப்பான ஆட்சி செய்த முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஒற்றை தலைமையை ஏற்க
வரும் பொதுக்குழு கூட்டத்திற்காக காத்திருக்கிறோம்.

அதேபோன்று ஒன்றரை கோடி தொண்டர்களை வேண்டுகோளுக்கிணங்க முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அவர்கள் ஒற்றைத் தலைமையை ஏற்க வேண்டும். புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிரியத்தை, நம்பிக்கையை, செல்வாக்கை பெற்றவரும், அதிமுக தொண்டர்களின் ஏகோபித்த ஆதரவு பெற்றவருமான முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் உயர்ந்த செல்வாக்கை யாராலும் எட்ட முடியாது.

ஆனால் தற்போது கட்சியை காப்பாற்றுவதற்காக திமுகவை நம்பிக்கையோடு எதிர்ப்பவர்
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி என்பதால் அனைவரின் ஒத்துழைப்போடும் நம்பிக்கை உள்ள ஒற்றை தலைமையைத் தேர்வு செய்வதே காலத்தின் கட்டாயம் என்று உதயகுமார் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.