நடுவானில் குலுங்கிய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் – முன்னும் பின்னும் தூக்கி வீசப்பட்டதில் பயணி ஒருவர் உயிரிழப்பு!

மோசமான வானிலை மற்றும் காற்றின் கொந்தளிப்பு காரணமாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் அவசரமாக தரையிரக்கப்பட்டது. இதனால் பயணிகளில் ஒருவர் உயிரிழந்துள்ளார் மற்றும் 30 பேர் காயமடைந்துள்ளனர். கணிக்க இயலாத காற்று நகர்வுகள் உள்ளிட்ட வளிமண்டல…

மோசமான வானிலை மற்றும் காற்றின் கொந்தளிப்பு காரணமாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் அவசரமாக தரையிரக்கப்பட்டது. இதனால் பயணிகளில் ஒருவர் உயிரிழந்துள்ளார் மற்றும் 30 பேர் காயமடைந்துள்ளனர்.

கணிக்க இயலாத காற்று நகர்வுகள் உள்ளிட்ட வளிமண்டல உறுதியற்ற தன்மையால் நேரிடும் நடுவான் கொந்தளிப்புக்கு அவ்வப்போது விமானங்கள் ஆளாவது உண்டு. அந்த வகையில், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை சேர்ந்த போயிங் ரக விமானம் ஒன்று, நடுவானில் காற்றின் கொந்தளிப்பு காரணமாகவும், மோசமான வானிலை காரணமாகவும் அவசரமாக தரையிரக்கப்பட்டது.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று லண்டனில் இருந்து சிங்கப்பூர் நோக்கி நேற்று (மே 20) கிளம்பியது. விமானத்தில் 211 பயணிகளும் 18 பணியாளர்களும் இருந்தனர். ஹீத்ரு விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் நோக்கி பறந்த விமானம், எதிர்பாராத விதமாக நடுவானில் காற்று கொந்தளிப்பு மற்றும் மோசமான வானிலையை எதிர்கொண்டது. இதனையடுத்து பாங்காக்கின் ஸ்வர்ணபூமி சர்வதேச விமான நிலையத்தில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் அவசரமாக இன்று பிற்பகல் 3.45 மணிக்கு தரையிறக்கப்பட்டது.

https://x.com/txttransportasi/status/1792898885683470707

இந்த, எதிர்பாராத சம்பவத்தில் பயணிகள் பலர் காயமடைய, அவர்களில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். காயமடைந்த பயணிகளுக்கான மருத்துவ உதவிகள் வழங்கப்படும்போது, ஒருவர் மரணமடைந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. பயணிகளில் 30 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட விமானத்தின் பயணிகளுக்கு உதவ தனிக்குழுவை பாங்காக்கிற்கு அனுப்பியுள்ளதாகவும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.