திருவிடைமருதூர் அருகே ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில் வெகு விமர்சையாக நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்து வழிபட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே கீழ பட்டக்கார தெருவில் அமைந்திருக்கும் திருவாடுதுறை ஆதினம் ஸ்ரீ மகாலிங்க சுவாமி திருக்கோயில் தேவஸ்தானத்திற்கு சொந்தமான அருள்மிகு திரௌபதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் தீமிதி மற்றும் திரு நடன உற்சவ திருவிழா கடந்த 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை முன்னிட்டு விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திருக்கல்யாண வைபவம் வெகு விமர்சையாக நடந்தது.
முன்னதாக சீர்வரிசைகள் சமர்பித்தலும், உற்சவர் சுவாமிகள் ஊஞ்சலில் எழுந்தருள நலுங்கு வைபவமும், மாலை மாற்றும் நிகழ்வும் நடைபெற்ற பின்னர், சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, யாகம் வளர்த்து நாதஸ்வர மேள தாளம் மங்கல வாத்தியங்களுடன் சுவாமி அம்பாளுக்கு திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.
—சௌம்யா.மோ
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.