“தமிழீழ விடுதலைப்புலிகளுக்காகக் குரல் கொடுக்கும் விக்னேஸ்வரன் மனநலம் பாதிக்கப்பட்டு இருக்க வேண்டும்” என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீதான தடை நீக்கப்பட்டது போல், தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையும் நீக்கப்பட வேண்டும் என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் செய்தியாளர்களிம் சரத் பொன்சேகா கூறியதாவது:
விடுதலைப்புலிகளை மீண்டும் தாலாட்டுவதற்கு விக்னேஸ்வரன் முற்படுகின்றாரா? அவருக்கு வயதுபோய் விட்டது. நீதியரசர் பதவியை வகித்தவரே விக்னேஸ்வரன். எதற்காக அவர் இப்படி பேசுகிறார். அவருக்கு மனநல பாதிப்பு இருக்க வேண்டும் என்றார் சரத் பொன்சேகா.
முன்னதாக, நாட்டைவிட்டு வெளியேறிய முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சவுக்கு இலங்கையில் அடைக்கலம் கொடுத்து அவரைப் பாதுகாக்கவே போராட்டக்காரர்களை அதிபர் ரணில் விக்ரமசிங்க கைது செய்து அடக்கி வருகின்றார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எச்சரிக்கை விடுத்து இருந்தார்.








