சிவசேனை எம்எல்ஏ நிதின் தேஷ்முக் குஜராத் மாநிலம், சூரத்திலிருந்து மகாராஷ்டிரத்துக்கு திரும்ப வேண்டும் என்று கூறியதற்காக சக அதிருப்தி எம்எல்ஏக்களால் தாக்கப்பட்டதாகப் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிரா அமைச்சரும், சிவசேனை மூத்த தலைவருமான ஏக்நாத் ஷிண்டே ஆளும் அரசுக்கு எதிராக கடும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அவரை கட்சித் தலைமையால் தொடர்புகொள்ள முடியவில்லை.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அவருடன் மேலும் 5 மாநில அமைச்சர்களும், 20-க்கும் மேற்பட்ட அக்கட்சியின் எம்எல்ஏக்களும் குஜராத் மாநிலம், சூரத் நகரில் அமைந்துள்ள ஹோட்டலில் தங்கியிருந்தனர். தற்போது அஸ்ஸாமில் முகாமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த இரண்டு மாநிலங்களுமே பாஜக ஆளும் மாநிலங்களாகும். ஏக்நாத் ஷிண்டே சிவசேனை கட்சியின் விசுவாசியாக இருந்தவர் ஆவார். இவர் இதுபோன்று ஆளும் அரசுக்கு எதிராக அதிருப்தி அடைந்தது சிவசேனை கட்சியினர் மத்தியில் அதிர்ச்சை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்நிலையில், அகோலா மாவட்டத்தின் பாலாபூர் சட்டசபை தொகுதி சிவசேனை எம்எல்ஏ நிதின் தேஷ்முக் சூரத்திலிருந்து மகாராஷ்டிரத்துக்கு திரும்ப வேண்டும் என்று கூறியதற்காக சக அதிருப்தி எம்எல்ஏக்களால் தாக்கப்பட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதையடுத்து, காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சூரத்தைச் சேர்ந்த முன்னாள் சிவசேனை உறுப்பினர் பரேஷ் கெர் கூறுகையில், “அதிகாலை 3 மணிக்கு என்னை தொலைபேசியில் நிதின் தேஷ்முக் தொடர்பு கொண்டு அழைத்துச் செல்லுமாறு கோரினார். எனது செல்போன் எண்ணை மும்பையில் உள்ள சிவசேனை கட்சியினரிடம் இருந்து வாங்கினார்” என்றார்.
இதனிடையே, சிவசேனை எம்.பி. சஞ்சய் ராவத் கூறுகையில், “நிதின் தேஷ்முக்கும் மேலும் 4 எம்எல்ஏக்களும் சூரத் ஹோட்டலில் இருந்து மாநிலத்துக்குத் திரும்ப முடிவு செய்தனர். அதற்காக அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நிதின் தேஷ்முக்கின் மனைவி தனது கணவரை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்தார்” என்றார்.
-மணிகண்டன்