பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரவுபதி முர்மு கோயில் வளாகத்தை தானே சுத்தம் செய்து வழிபாடு நடத்தியுள்ளார்.
நாட்டின் 15 வது குடியரசுத் தலைவருக்கான தேர்தல் ஜூலை 18 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக பழங்குடியின சமூகத்தை சேர்ந்த திரவுபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகள் சார்பில், யஷ்வந்த் சின்ஹா அறிவிக்கப்பட்டுள்ளார்.
முர்மு கடந்த 2015ஆம் ஆண்டு மே 18ம் தேதி முதல் 2021ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் தேதி வரை ஜார்க்கண்ட் ஆளுநராகப் பதவி வகித்தார். ஜார்க்கண்டின் முதல் பெண் ஆளுநர் என்ற பெருமையும் திரெளபதி முர்மு பெற்றார். அத்துடன், ஒடிஸா மாநிலத்திலிருந்து பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், ஒரு மாநிலத்தின் ஆளுநராக்கப்பட்டதும் அதுவே முதல் முறையாகும்.
https://twitter.com/ANI/status/1539446553798008832
இந்த பின்னணியுடன் குடியரசுத் தலைவருக்கான தேர்தலில் களம் காண்கிறார் முர்மு. இவருக்கு தமிழ்நாட்டிலிருந்து பாட்டாளி மக்கள் கட்சி ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இன்று காலை ஒடிசா மாநிலத்திலுள்ள கோயில் ஒன்றில் தரிசனம் செய்ய சென்ற அவர், கோயிலின் வளாகத்தை துடைப்பம் கொண்டு தானே சுத்தம் செய்தார். பின்னர் உள்ளே சென்று தரிசனம் செய்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.







