விநாயகப் பெருமானை போற்றும், சீர்காழி கோவிந்தராஜனின் குரலில் ஒலிக்கும் விநாயகனே வினை தீர்ப்பவனே பக்திப்பாடலை கேட்டு தினந்தோறும் காலையில் எழுவோர் ஆயிரக்கணக்கானோர் உண்டு. சில்லிடும் காலை நேரக் குளிரில், ஒலிக்கும் பாடலைக் கேட்டு, உள்ளம் புத்துணர்ச்சி பெற்று அன்றைய நாளை நம்பிக்கையுடன் கடக்க உதவும் பாடலை எழுதியவர் உளுந்தூர்பேட்டை சண்முகம்.
சீர்காழி கோவிந்தராஜனுக்காக ஒன்றல்ல, பலநூறு பக்திப் பாடல்களை எழுதியுள்ளார் சண்முகம். பக்தி இலக்கியப் படைப்பாளிகளில் குறிப்பிடத்தக்கவரான உளுந்தூர்பேட்டை சண்முகம், பக்திப் பாடல்களால் தமிழிசையில் ஒரு புதிய எழுச்சியினை ஏற்படுத்தியவர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அன்றாடம் கேட்கும் சில பாடல்களை எழுதியது வாலியா, கண்ணதாசனா என சிலநேரம் மனதில் கேள்வி எழும். அவர்களைப் போல் சிறந்த வரிகளை தந்தவர் உளுந்தூர்பேட்டை சண்முகம். அகத்தியர் என்ற பக்திப்படத்தை தயாரித்தபோது, ராவணன் – அகத்தியர் இடையே இசைப்போட்டி நடைபெறுவதாக காட்சி அமைத்திருந்தார் இயக்குநரான A.P. நாகராஜன்.
பாடலில் ராகங்களின் பெயர் இடம்பெற வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. கண்ணதாசன் தான் பாட்டெழுத வேண்டும் என அனைவரும் கருத, கவிஞர் உளுந்தூர்பேட்டை சண்முகம், தனது தமிழால் பாட்டெழுதும் வாய்ப்பை வென்றார்.
வேற்று மொழி கீர்த்தனைகளுக்கு, பாடலின் பொருள் விளங்காமல், ராகத்திற்காக, இசைக்காக, தலையாட்டி வந்த தமிழ் மக்களுக்கு, எளிய, இனிய தமிழில், இசையை அறிமுகம் செய்து வைத்தவர் உளுந்தூர்பேட்டை சண்முகம். திருமலைத் தென்குமரி படத்தில் இடம்பெற்ற மதுரை அரசாளும் மீனாட்சி என்ற பாடலை எழுதியவரும் அவரேதான்.
ராஜ ராஜ சோழன் திரைப்படத்தில் இடம்பெற்ற, தென்றலோடு உடன்பிறந்தாள் செந்தமிழ்ப்பெண்ணாள் என்ற பாடலில் தமிழ்மொழியின் நூல்களின் பெயரை அடுக்கடுக்காக வரிகளாக சேர்த்து பாடலாக கோர்த்து தந்திருப்பார்.
பலநூறு பாடல்களை எழுதி, தமிழிசைக்கும், பக்திக்கும் இடையே பாலமாய் நிலைத்து நிற்கிறார் உளுந்தூர்பேட்டை சண்முகம்…