நடிகை மணிஷா யாதவுக்கு பாலியல் துன்புறுத்தலா? – இயக்குநர் சீனு ராமசாமி விளக்கம்!

வழக்கு எண் 18 / 9 திரைப்படத்தில் அறிமுகமான நடிகை மணிஷா யாதவுக்கு பாலியல் துன்புறுத்தல் நிகழ்ந்ததாக எழுந்த புகாருக்கு இயக்குநர் சீனு ராமசாமி விளக்கம் அளித்துள்ளார். தென்மேற்கு பருவக்காற்று,  நீர்ப்பறவை,  தர்மதுரை,  கண்ணே…

வழக்கு எண் 18 / 9 திரைப்படத்தில் அறிமுகமான நடிகை மணிஷா யாதவுக்கு பாலியல் துன்புறுத்தல் நிகழ்ந்ததாக எழுந்த புகாருக்கு இயக்குநர் சீனு ராமசாமி விளக்கம் அளித்துள்ளார்.

தென்மேற்கு பருவக்காற்று,  நீர்ப்பறவை,  தர்மதுரை,  கண்ணே கலைமானே ஆகிய  திரைப்படங்களை இயக்கியவர் சீனு ராமசாமி.  இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான ‘மாமனிதன்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதோடு உலக அரங்கில் பல விருதுகளையும் வாங்கி குவித்தது.  இதனைத் தொடர்ந்து இவர்  அடுத்ததாகக் ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ என்ற பெயரில் புதிய படத்தை இயக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில், இயக்குநர் சீனு ராமசாமி நடிகை மணிஷா யாதவுக்கு பாலியல் ரீதியாக தொல்லை  கொடுத்ததாக பத்திரிகையாளர் ஒருவர் குற்றம் சாட்டியிருந்தார்.  இது சமூக வலைதளங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது குறித்து யூடியூப் சேனலில் பேசிய அந்த பத்திரிகையாளர்  “சீனு ராமசாமியின் இடம் பொருள் ஏவல் படத்தில் நடிகை மனிஷா யாதவ்தான் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். கொடைக்கானலில் படத்தின் படப்பிடிப்பு நடந்தபோது சீனு ராமசாமி தினமும் மணிஷா யாதவுக்கு பாலியல்ரீதியாக தொல்லைக் கொடுத்துள்ளார்.  இதனால், ஒருகட்டத்தில் தொல்லை தாங்க முடியாமல் அப்படத்திலிருந்து மணிஷா விலகிக் கொண்டார்.  அதன்பின்,  வேறு ஒரு நாயகி அப்படத்தில் இணைந்தார்.  இந்த சம்பவத்துக்குப் பின் மணிஷா சினிமாவிலிருந்து விலகிக் கொண்டார்” என  அந்த  வீடியோவில்  பேசியிருந்தார் . இது சமூக வலைதளத்தில் மேலும், சர்ச்சைகளைக் கிளப்பியது.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள இயக்குநர் சீனு ராமசாமி தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது..

சில கேள்விகள் ஃபிளாஷ் பேக்..

1) இடம் பொருள் ஏவல் படப்பிடிப்பிற்கு வந்த முதல் நாள் ஏன் முதல் ஷாட்டில் 28 டேக் வாங்கினார் மணிஷா?

2) படப்பிடிப்பு தளத்தில் உதவிட வந்த மூத்த நடிகையர் வடிவுக்கரசியிடம் கோபித்து கடுஞ்சொல் வீசினாரே ஏன்?

3) விஷ்ணு விஷால் ஜோடியாக நடியுங்கள் என நானும் அண்ணாமலை பீலிம்ஸ் கணேஷ் அவர்களும் கேட்ட பொழுது ஏன் மறுத்தார் ?

4) என் சம்பளத்தில் ஒரு லட்சம் நஷ்ட ஈடாக பெற்றாரே ஏன்?

5) மூன்று நாட்கள் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தந்த ஹோட்டலில் தன் தாயாருடன் தங்கிருந்த மனிஷா அவர்களை கடைசி ஒரு நாள் காலையில் படப்பிடிப்பில் சந்தித்தேன்.

6) அந்த 28 டேக் மேக்கிங் வீடியோவுக்கு காத்திருக்கிறேன்.  தெய்வம் அருளனும் இருப்பினும் உங்களோடு திரும்ப பணி புரிய விரும்பினேன்.

நவீன இலஷ்மி காந்தன் பிஸ்மி அண்ணன் …  ஒவ்வொரு நாளும் தன் பேச்சை எனக்கு அனுப்புவார்.  ஒரு பூ வாட்ஸ்சப்பில் அவருக்கு போடுவேன் கடைசியில் மலர் அஞ்சலி எனக்கு வைக்க முயல்வார் என நான் எதிர் பார்க்கவில்லை.

மாமனிதன் பெற்ற விருதுகளை பிண அலங்காரம் என வசை பாடியது எனக்கு வலித்தது, மாமனிதன் உலகம் போற்றிய ஒரு சினிமா,  அதனால் உங்களை ஒருமையில் எழுதி விட்டேன். ஏன் கடந்த ஒன்னரை வருடமாக என்னை டார்க்கெட் செய்து வலை பேச்சில் 20 வீடியோ பேசினீர்கள் பிஸ்மி அண்ணா? தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மூலமாக பேசி பின் நானே அண்ணே என்னை நெகட்டிவா சொல்ல வேண்டாம் என கெஞ்சிய வாய்ஸ் நோட்ஸ் அனுப்பினேன் மூன்று மாதம் முன்பு.  ஆண்களை படத்தில் நீக்கினால் சிறந்த டைரக்டர் அதுவே பெண்களை நீக்கினால் பாலியல் பழியா?

உங்கள் மனைவியார் என் வீட்டுக்கு புகைப்பட கலைஞரோடு வந்து என் அம்மாவை பேட்டி எடுத்தாங்க என்னையும் என் அம்மாவையும் இணைத்து படமும் எடுத்தாங்க அந்த பேட்டியை நன்றியோடு என்றும் நினைப்பேன்.

அன்பன் சீனு ராமசாமி “ என இயக்குநர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.

மணிஷா யாதவ் வழக்கு எண் 18/9 படத்தில் அறிமுகமானார்.  தொடர்ந்து, ‘ஆதலால் காதல் செய்வீர்’,  ‘ஒரு குப்பைக் கதை” போன்ற திரைப்படங்களில் நடித்து கவனம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை மணிஷா யாதவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,  “என்னிடம் அநாகரீகமாக நடந்து கொண்டவரிடம் இணைந்து நடிக்க என்ன தேவை இருக்கிறது? சீனு ராமசாமி சார் நீங்கள் உண்மையைப் பேச வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.