பாலியல் புகாரில் கைதாகும் குற்றவாளிகள் தண்டனையில் இருந்து தப்பி விடாமல் இருக்க வழக்கில் விரைவாக விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கும்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலத் தலைவர் பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
“சுஷில் ஹரி சர்வதேச பள்ளியின் நிறுவனரும், தன்னைத்தானே கடவுளின் அவதாரம் என்று சொல்லிக் கொள்பவருமான சிவசங்கர் (பாபா) தன் பள்ளியில் படிக்கும் மாணவிகளை பாலியல் துன்புறுத்தல் செய்தார் என்கிற புகாரின் அடிப்படையில் சமீபத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அண்மைக்காலத்தில் வெளிவரும் இத்தகைய குற்றங்கள், பள்ளிகளில் பெண் குழந்தைகள் எதிர்கொள்ளும் பாதுகாப்பற்ற சூழ்நிலையை வெளிக் கொண்டு வருகிறது. இது பெற்றோர்களை மட்டுமல்ல, ஒட்டு மொத்த சமுதாயத்தை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அதிகாரப் படிநிலையின் உச்சியில் இருக்கும் சிவசங்கர், தண்டனையிலிருந்து தப்புவதற்காக எதை வேண்டுமானாலும் செய்ய தயாராக இருப்பார். இவர் வெளியே இருப்பது வழக்கை சீர்குலைக்கவே உதவும். புகார் வந்தபின் இவர் மேற்கொண்ட தலைமறைவு வாழ்க்கையே இதற்கு எடுத்துக்காட்டாக உள்ளது. அவர் மீது குறிப்பிட்ட கால வரையறைக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து வழக்கு விரைந்து முடிக்க படுவதற்கான முயற்சிகளை போலீசார் மேற்கொள்ள வேண்டும்.
கல்வி நிலையங்களிலும், அனைத்து பணியிடங்களிலும் பாலியல் துன்புறுத்தல் புகார் கமிட்டி அமைக்கப்படுவதை மாநில அரசு உத்தரவாதப்படுத்த வேண்டும். தனியார் நடத்தும் சர்வதேச பள்ளிகள் துவங்கி அரசு நடத்தும் கிராமப்புற பள்ளிகள் வரை பல்வேறு இடங்களில் இக்கொடுமைகள் தொடர்கின்றன. இச்சூழலில் பெற்றோர், ஆசிரியர், மாணவர் பெண்கள் அமைப்புகள், அரசியல் கட்சிகள் என அனைவரிடமும் விவாதித்து தேவையான நடவடிக்கைகளை பள்ளிக்கல்வித்துறையும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும்.”
இவ்வாறு பாலகிருஷ்ணன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.







