பாலியல் வழக்கு: தலைமறைவான முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு “லுக் அவுட்” நோட்டீஸ்!

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்தது தொடர்பான வழக்கில்,  சிறை தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தலைமறைவாகியுள்ள நிலையில் அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.   2021-ல்…

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்தது தொடர்பான வழக்கில்,  சிறை தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தலைமறைவாகியுள்ள நிலையில் அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

2021-ல் தமிழ்நாட்டு காவல் துறை சிறப்பு டிஜிபி-யாக இருந்த ராஜேஷ் தாஸ்,  பெண் எஸ்.பி. ஒருவருக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக குற்றம்சாட்டப்பட்டது.  இந்த சம்பவம் குறித்து ராஜேஷ் தாஸ் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தினர்.  இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸூக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம் விதித்து விழுப்புரம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்நிலையில்,  தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி ராஜேஷ் தாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.  சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என அவர் அப்போது கோரிக்கை விடுத்திருந்தார்.  ஆனால், அந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.  மேல்முறையீட்டிலும் இந்த தண்டனை உறுதி செய்யப்பட்டது.

தொடர்ந்து,  அவரை கைது செய்வதற்காக சென்னை தையூர் பகுதியில் உள்ள அவரது வீட்டுக்கு போலீஸார் சென்ற போது அவர் தலைமறைவானது தெரியவந்தது.  இந்த நிலையில்,  அவர் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் இருக்க அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.  சிபிசிஐடி சார்பில் அளிக்கப்பட்டுள்ள இந்த லுக் அவுட் நோட்டீஸ் குறிப்பாக அனைத்து விமான நிலையங்களிலும்/துறைமுகங்களிலும் ஒட்டப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.