தெலங்கானா மாநிலத்தில், நிறைமாத கர்ப்பிணியை ஸ்டெச்சரில் வைத்து, ஆபத்தான வகையில் வெள்ள நீர் பெருக்கெடுத்த ஓடையை ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கடந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம், மஞ்ரியால மாவட்டம், கொட்டப்பள்ளி மண்டலத்தில் உள்ள நக்கலப்பள்ளி மலை கிராமத்தைச் சேர்ந்த சுபத்ரா, நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். அப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக, நக்கலப்பள்ளி கிராமத்திற்குச் செல்லும் வழியில் உள்ள ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால், நக்கலப்பள்ளி உள்ளிட்ட 8 கிராமங்கள் துண்டிக்கப்பட்டன. இந்நிலையில், நிறைமாத கர்ப்பிணியான சுபத்ராவுக்கு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து, குடும்பத்தினர் ஆம்புலன்சுக்கு தகவல் அளித்தனர். எனினும், ஓடையில் தண்ணீர் சென்று கொண்டிருந்ததால், நக்கலப்பள்ளி கிராமத்திற்குச் செல்ல முடியாமல் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் 3 மணிநேரமாக தவித்து வந்தனர்.
மறுகரையில், சுபத்ரா பிரசவ வலியுடன் துடித்துக் கொண்டிருந்தார். இதையடுத்து, ஆம்புலன்ஸ் ஊழியர்கள், ஸ்டெச்சரில் சுபத்ராவை சுமந்து, ஓடையில் இறங்கி ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு எடுத்துச் சென்றனர். எனினும், சுபத்ராவுக்கு பிரசவ வலி அதிகரித்து, ஆம்புலன்ஸ்சிலேயே குழந்தை பிறந்தது. பின்னர், அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.







